மாருதிக்கு ஷாக் கொடுத்த டாடா பன்ச் கார்... முதலிடத்தை பிடித்து அசத்தல்!
இந்திய கார் சந்தையில் மாருதி தயாரிப்புகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆகஸ்ட் மாத விற்பனை பட்டியலில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. டாடா கார்ஸ் நிறுவனத்தின் பன்ச் கார் 21,320 யூனிட்டுகள் விற்பனையாகி, நாட்டிலேயே அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10,704 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு அதே மாதத்தில் விற்பனை 21,320 யூனிட்டுகளாக உயர்ந்து இரடிப்பாகி உள்ளது. அதாவது, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 99 சதவீதம் வளர்ச்சியை பன்ச் கார் பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் 20,180 யூனிட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், ஸ்விஃப்ட் கார் 19,832 யூனிட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதாவது, வேகன் ஆரை விட பன்ச் 1,140 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இதன்மூலமாக குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் பன்ச் கார் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பன்ச் விற்பனை எண்ணிக்கையில் பெட்ரோல் மற்றும் மின்சார மாடல் என இரண்டு விற்பனையும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, 21,320 என்பது வெறும் பெட்ரோல் பன்ச் மட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், இந்த காரின் ஒட்டுமொத்த விற்பனை 21,000 யூனிட்டுகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
பன்ச் காரின் வெற்றிக்கு அதன் வடிவமைப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மிக குறைவான பட்ஜெட்டில் சிறப்பான எஸ்யூவி கார் வடிவமைப்பு இதற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. நகரப் பயன்பாட்டிலும் பன்ச் கார் பலருக்கு பொருத்தமான தேர்வாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில் ஓட்டுவதும், குறுகிய இடங்களில் நிறுத்துவதும் எளிதாக இருக்கிறது. உட்புறத்திலும் போதுமான இடவசதியையும் அளிக்கிறது.
மேலும், முதல்முறையாக கார் வாங்குவோருக்கு அதிக மதிப்பு வாய்ந்த தேர்வாகவும் இருக்கிறது. தற்போது கார் வாங்குபவர்களிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அந்த வகையில், பன்ச் காரின் கிராஷ் டெஸ்ட் தர மதிப்பீடும், பாதுகாப்பு அம்சங்களும் கூடுதல் மதிப்பை பெற்றுள்ளது.
பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சார பதிப்புகள் என வாடிக்கையாளர்களின் விருப்பம், தேவைக்கு ஏற்ப வெவ்வேறு எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகளும் கிடைக்கிறது. தினசரி நகரப் பயணத்திற்கு பெட்ரோல் அல்லது சிஎன்ஜியையும், அதிக எரிபொருள் சேமிப்பு மற்றும் நகர்ப்புறத்தில் பயன்படுத்துவோருக்கு மின்சார மாடலும் சிறப்பானதாக இருக்கிறது.
விற்பனை பட்டியலில் பன்ச் முதலிடத்தை பிடித்திருந்தாலும், ஒட்டுமொத்த கார் சந்தையில் மாருதி சுஸுகியின் ஆதிக்கம் தொடர்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 இடங்களில் வேகன் ஆர், ஸ்விஃப்ட், ஃப்ரான்க்ஸ், எர்டிகா, டிசையர் மற்றும் பலேனோ என மாருதியின் ஆறு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த வலுவான மாருதி கார்களை விஞ்சி நம்பர் 1 இடத்தை டாடா பன்ச் பிடித்திருப்பது எல்லோரின் புருவத்தை உயர்த்தி உள்ளது.
டாடா கார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் காரும் 18,431 யூனிட்டுகள் விற்பனையாகி முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் டாடா மோட்டார்ஸின் நிலை வலுப்பெற்றுள்ளது. இரண்டு மாடல்களும் ஒரே மாதத்தில் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளன.


Click it and Unblock the Notifications


