ராணுவ பயன்பாட்டிற்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி தேர்வு!
ராணுவ பயன்பாட்டுக்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
இந்திய ராணுவ பயன்பாட்டிற்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கடும் போட்டிக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக மாருதி ஜிப்ஸி எஸ்யூவிதான் நம் நாட்டு ராணுவ பயன்பாட்டு வாகனமாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராணுவ பயன்பாட்டுக்கு புதிய எஸ்யூவி கார் மாடல்களை தேர்வு செய்யும் பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக தயாரித்து வழங்கப்பட்ட டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் சில ஆண்டுகளாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

மிக ஏற்றமான மலைச் சாலைகளில் ஏறும் திறன், பனிச் சாலைகளில் செல்வதற்கான திறன், சதுப்பு நில பகுதிகளில் செல்வதற்கான திறன், கட்டுறுதி, எஞ்சின் செயல்பாடுகள் இந்த சோதனைகளின்போது ஆய்வு செய்யப்பட்டது.

அதில், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என இரண்டுமே சிறப்பாகவே இருந்தன. ஆனால், விலை அடிப்படையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது, டாடா சஃபாரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 3,192 டாடா சஃபாரி எஸ்யூவிகளை ராணுவத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றி உள்ளது. அஅமேலும், கூடுதல் ஆர்டர்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கான வாகனமாகவும் டாடா சஃபாரி பயன்படுத்தப்படும். அவசர காலங்களில் சிறிய தளவாடங்களை விரைவாக கொண்டு செல்வதற்கும், போர் முனைகளிலும் பயன்படுத்தும் நோக்குடன் இவை வாங்கப்படுகின்றன.

தற்போது 30,000 மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகள் ராணுவ பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு மாற்றாக புதிய டாடா சஃபாரி எஸ்யூவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், 30,000 டாடா சஃபாரி எஸ்யூவிகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications







