பவர்ஃபுல் ஜேடிபி கார் மாடல்களுக்கு விடை கொடுத்தது டாடா மோட்டார்ஸ்
கார் மார்க்கெட் தள்ளாடி வரும் நிலையில், சூழலை புரிந்து கொண்டு டாடா டியாகோ, டிகோர் கார்களின் பவர்ஃபுல் மாடல்களை சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் கார்கள் பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாகவும், அதிக மதிப்பையும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்த இரண்டு கார்களின் சக்திவாயந்த மாடல்களை ஜேடிபி பிராண்டில் 2018ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது.

சாதாரண டாடா டியாகோ மற்றும் டிகோர் மாடல்களைவிட ஜேடிபி பிராண்டில் விற்பனை செய்யப்பட்ட மாடல்கள் தோற்ற்றத்தில் அதிக கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்த எஞ்சினுடன் வந்தன. குறைவான பட்ஜெட்டில் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இவை சிறந்த தேர்வாக அமைந்தன.

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த சக்திவாய்ந்த எஞ்சினுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில், சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டிருந்தது. மேலும், ஜேடிபி பிராண்டுடன் கவர்ச்சிகரமான அலங்கார விஷயங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால், அதிக கவர்ச்சியாகவும் இருந்தன.

கோவையை சேர்ந்த ஜெயம் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் 50:50 என்ற விகிதாச்சார முதலீட்டுடன் இந்த கார்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்து விற்பனை செய்து வந்தது. கார்களை உருவாக்கும் பணிகளை ஜெயம் எஞ்சினியரிங் நிறுவனமும், விற்பனை, சர்வீஸ் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் செய்து வந்தன.

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கார் விற்பனை கடுமையாக சரிந்து வந்ததுடன், தற்போது கொரோனா பிரச்னையும் சேர்ந்து கொண்டதால், கார் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. மேலும், ஜேடிபி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பும் இல்லை.

இதனை மனதில் வைத்து ஜேடிபி பிராண்டில் விற்பனை செய்யப்படும் டியாகோ, டிகோர் கார்களை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும், ஜேடிபி நிறுவனத்தில் ஜெயம் எஞ்சினியரிங் செய்துள்ள 50 சதவீத பங்கு முதலீட்டை தன் வசப்படுத்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரை விற்பனை செய்யப்பட்ட டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களுக்கான விற்பனைக்கு பிந்தைய சேவைகள் மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை தொடர்ந்து வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications







