கொரோனா பிரச்னைக்கு மத்தியில் அசத்தும் குஜராத்... அதிநவீன வசதிகளுடன் 50 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம்!
குஜராத்தில் அதிநவீன வசதிகளுடன் 50 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் விஜய் ரூபானி 50 ஜேபிஎம் எகோ-லைஃப் எலெக்ட்ரிக் பேருந்துகளை இன்று (மே 28) அறிமுகம் செய்தார். இதற்கான நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது. அகமதாபாத் நகருக்கு ஜேபிஎம் நிறுவனம் மொத்தம் 180 பேருந்துகளை சப்ளை செய்யவுள்ளது. இதில், முதற்கட்டமாக தற்போது 50 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 3.50 லட்சம் லிட்டர் டீசல் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த பேருந்துகளில் பல்வேறு அதிநவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதில், பேருந்து எங்கே உள்ளது? என்பதை நிகழ்நேரத்தில் பயணிகள் அறிந்து கொள்ளும் வசதி மிகவும் முக்கியமானது.

இதுதவிர அவசர சூழல்களுக்கான பேனிக் பட்டன்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேருந்தை நிறுத்துவதற்கு உதவி செய்யும் பட்டன்கள் என பல்வேறு வசதிகள் இந்த பேருந்துகளில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கான மற்றும் முறையாக பராமரிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்துகளின் தடையற்ற இயக்கம் உறுதி செய்யப்படும். இதுகுறித்து ஜேபிஎம் குழுமத்தின் துணை தலைவர் நிஷாந்த் ஆர்யா கூறுகையில், ''அகமதாபாத்தில் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, பசுமையான போக்குவரத்து என்ற எங்களின் பார்வைக்கு ஏற்ப உள்ளது.

மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம், கர்நாடகா, டெல்லி, அந்தமான் & நிக்கோபர் போன்ற மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எங்கள் பேருந்துகள் மக்களுக்கு வெற்றிகரமாக சேவையாற்றி வருகின்றன'' என்றார். இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் தற்போது மானியங்களை வழங்கி வருகின்றன. அத்துடன் சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அத்துடன் பொது போக்குவரத்தை எலெக்ட்ரிக்மயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டுள்ளன. அதிகரித்து கொண்டே வரும் காற்று மாசுபாடு பிரச்னையை இதன் மூலம் குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் தேவை குறையும். இதன் விளைவாக கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும். இந்தியாவிற்கு கடந்த சில ஆண்டுகளாகவே கச்சா எண்ணெய் இறக்குமதி மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும்பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications







