பிஸியான சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்! மனிதம் இன்னும் சாகவில்லை... மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு!
மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் நிகழ்வு பேங்காக்கில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மிகவும் பிஸியான சாலை ஒன்றில் பேருந்து ஒன்று திடீரென நிறுத்தப்படுவதைப் போலவும், அதில் நான்கு கால்கள் கொண்ட சிறிய உருவம் மிகுந்த அச்சத்துடன் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து ஏறுவதைப் போன்றும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்து நாட்டின் தலைநகரான பேங்காக்கிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

மிக சமீபத்தில் உள்ளூர் ரேடியோவில் பேங்காக்கின் பிஸியான சாலை ஒன்றில் நாய் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்த நாயையே பேங்காக் அரசு போக்குவரத்துறையைச் சார்ந்த ஓட்டுநர் ஒருவர் மீட்டெடுத்திருக்கின்றார்.

சாலையில் சுற்றித்திரிந்த நாய்க்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் அவர் செயல்பட்டிருக்கின்றார். முன்னதாக நாயை பேருந்தில் ஏற்றுவதற்கு முன்னர் பேருந்துக்குள் இருந்த அனைத்து பயணிகளிடத்திலும் பேருந்தின் நடத்துநர் அனுதி கேட்டிருக்கின்றார். இதன் பின்னரே அந்த நாய் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

நாயின் பெயர் குக்கீ என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் கட்டுமான பணி நடைபெறும் பகுதிக்கு அருகில் தொலைத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே நாய் தொலைந்து போயிருக்கின்றது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுநரின் முயற்சியால் மீண்டும் அந்த நாய் உரிமையாளரிடத்திலேயே கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றது.

முன்னதாக பேருந்தில் நாயை ஏற்றிய ஓட்டுநர் அதனை டிப்போவிற்கு அழைத்து சென்று, அங்கு வைத்து நீர் மற்றும் உணவுகளை வழங்கியிருக்கின்றார். இதன் பின்னரே குக்கீ அதன் உரிமையாளரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக சன்மானமாக 5 ஆயிரம் பாத்கள் பேருந்து ஓட்டுநருக்கு நாயின் உரிமையாளர் வழங்கியிருக்கின்றார்.

அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் அந்த தொகையை விலங்குகள் நல காப்பகத்திற்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். ஓட்டுநரின் இந்த செயல் மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், ஓட்டுநருக்கும், அதன் நடத்துநருக்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பேங்காக் போக்குவரத்து கழகம் சார்பில் இருவருக்கும் ரிவார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் பெயர் ட்வென் பிரதும்தோங் என கண்டறியப்பட்டுள்ளது. இவரே, குக்கீ நெடுஞ்சாலையில் அங்கு இங்குமாக அலைந்துக் கொண்டிருப்பதைக் கண்டு பேருந்தில் ஏற்றிய வந்தவர்.

பேருந்தில் ஏறிய பின்னர் குக்கீ யாருக்கும், எந்த தொந்தரவும் செய்யாமல் அமைதியாக இருக்கைக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டதாக ஓட்டுநரும், பேருந்தில் பயணித்த பயணிகளும் கூறியுள்ளனர். "நாய் நீண்ட நாட்களாக உணவருந்தாமல் இருந்ததால், அது மெளிந்து காணப்பட்டது. மேலும், மிகவும் சோகமாகவும் தென்பட்டது" என்றும் பயணிகள் தெரிவித்தனர்.
Image Courtesy: The Nation Thailand
நாய் குறுக்கில் வருவதை அறிந்தும், வாகனங்களை அதி-வேகமாக இயக்கி அவற்றை அச்சுறுத்தும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்ற அதேவேலையில், ஆபத்தில் நாய் இருப்பதை உணர்ந்து அதனை பத்திரமாக மீட்டு, ஓட்டுநர் ஒருவர் ஒப்படைத்திருப்பது அவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் அமைந்துள்ளது. இச்சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








