காரின் விலைக்கு இணையான தொகையை பார்க்கிங் கட்டணமாக செலுத்த உத்தரவு... தொகை எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!
காரின் விலைக்கு இணையான தொகையை பார்க்கிங் கட்டணமாக செலுத்த டாடா நானோ கார் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்திலே நாம் பார்க்கவிருக்கும் விநோதமான சம்பவம் அரங்கறியிருக்கின்றது. இளம் வயதுள்ள பெண் வழக்குரைஞர் ஒருவர் தனது டாடா நானோ காரை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி சர்வீஸுக்காக ஓர் ஒர்க்ஷாப்பில் விட்டிருக்கின்றார்.

ஹர்சோலியா பிரதர்ஸ் ஒர்க்ஷாப் எனும் ஒர்க்ஷாப்பிலேயே நானோ காரை அவர் விட்டிருக்கின்றார். ஒரு சில நாட்களியே காரை சரி செய்துவிட்டதாக பணியாளர்கள் அப்பெண் வழக்குரைஞருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து, சர்வீஸ் கட்டணமாக ரூ. 9,900க்கான பில்லையும் அவரிடத்தில் கொடுத்திருக்கின்றனர்.

கட்டணம் அதிகமாக இருப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்குரைஞர், ஏசி மற்றும் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து சில பாகங்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறினார். ஆகையால், அவற்றை உடனடியாக சரி செய்து கொடுக்கும்படி கூறிவிட்டு காரை அங்கேயே விட்டுவிட்டு பணம் ஏதும் செலுத்தாமல் அங்கிருந்து அவர் நழுவியிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டில் காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வாயிலாக ஓர் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பினார். அதில், உடனடியாக பழுதுகளை நீக்கி, நல்ல வேலை செய்யும் நிலையில் காரை ஒப்படைக்குமாறு அதில் கூறியிருந்தார். பதிலுக்கு, தங்கள் தரப்பிலும் ஓர் புகாரை சர்வீஸ் மையம் அனுப்பியது. முன்னதாக 58 மின்னஞ்சல்கள் ம ற்றும் வக்கீல் நோட்டீஸ் உள்ளிட்டவற்றையும் நிர்வாகம் சார்பாக பணியாளர்கள் அனுப்பியிருக்கின்றனர்.

இவை எதற்குமே பெண் அட்வகேட் செவி சாய்க்கவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே நாள் ஒன்றிற்கு பார்க்கிங் கட்டணமாக ரூ. 100 தொகையையும், சர்வீஸ் செய்ததற்கான கட்டணம் ரூ. 9,900த்தையும் உடனடியாக செலுத்தி காரை எடுத்து செல்லுமாறு சர்வீஸ் நிர்வாகம் மறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. சர்வீஸ் மையத்தின் இந்த செயல் பெண் அட்வகேட்டிற்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளும் பயன்படும் நோக்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த காரே நானோ. ரூ. 1 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இத்தகைய விலைக் குறைந்த காருக்கே நாள் ஒன்றிற்கு ரூ.100 என மதிப்பிட்டு 2018-ல் இருந்து தற்போது வரை கணக்கிடப்பட்டு ரூ. 91 ஆயிரத்தைக் கட்டணமாக செலுத்துமடி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கின்றது.

இதையடுத்து 2020ம் ஆண்டில் இதற்கு எதிராக மற்றுமொரு விண்ணப்பத்தை பெண் வழக்குரைஞர் பதிவு செய்தார். அதில், ஆறு முறைக்கும் மேலாக தான் சர்வீஸ் மையத்தைத் தொடர்பு கொண்டதாகவும், தனது காரை விரைவில் ஒப்படைக்கும்படி அப்போது கோரிக்கை விடுத்தாகவும் கூறியிருக்கின்றார். மேலும், தனது கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் சர்வீஸ் நிர்வாகம் தரப்பில் இருந்து கிடைக்கவில்லை என அந்த விண்ணப்பத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக, "பெண் வழக்கறிஞர் தனது வக்கீல் பலத்தைப் பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் காரை பெற முயற்சிப்பதாக" குற்றம் சாட்டியிருக்கின்றது. தொடர்ந்து, வழக்கறிஞர்களின் இதுமாதிரியான முரண்பாடான செயல்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், ஓர் முன்மாதிரியான நடவடிக்கையை அவர்கள் மீது எடுக்கும்படியும் சர்வீஸ் நிர்வாகம் கோரிக்கையை வைத்திருக்கின்றது.

இந்த வழக்கை விசாரித்த ஆணைக்குழுவின் தலைவர் டி.டி. சோனி மற்றும் உறுப்பினர் ஜே.பி. ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, "கட்டணம் செலுத்த தவறிய காரணத்தினால், விண்ணப்பதாரரை ஒரு நுகர்வோராக கருத இயலாது. எனவே எந்தவொரு இழப்பீடும் அவருக்கு வழங்க முடியாது. உண்மையில், பல நினைவூட்டல்களுக்குப் பின்னரும் டாடா நானோ காரை எடுக்காததால், அந்த வாகனம் ஒரே நின்று தற்போது மேலும் சேதமடைந்திருக்கின்றது.

எனவே, புகார்தாரர் மீதே தவறுகள் அதிகம் இருக்கின்றன. ஆகையால், பழுதுபார்ப்புக்கான அசல் செலவு ரூ. 9,900, பார்க்கிங் கட்டணம் நாள் ஒன்றிற்கு 100 ரூபாய் என 910 நாட்களுக்கு ரூ.91,000த்தை செலுத்த வேண்டும். இத்துடன், கூடுதலாக கமிஷன் ரூ. 3,500-யும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Source: TOI
Note: Images are representative purpose only


Click it and Unblock the Notifications








