காரியத்தை கச்சிதமா முடிச்சிடணும்... மஹாராஷ்டிரா மாநில அரசு போடும் பலே கணக்கு... என்னனு தெரியுமா?
மஹாராஷ்டிராவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வரும் 2025ம் ஆண்டிற்குள், மஹாராஷ்டிராவில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களில் 10 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அம்மாநில அரசு தற்போது தெரிவித்துள்ளது. அத்துடன் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு பேட்டரிகளை உற்பத்தி செய்ய மஹாராஷ்டிராவில் குறைந்தபட்சம் ஒரு ஜிகாபேக்டரியை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வீடியோ கான்பரன்சிங் முறையில் கூட்டம் நடைபெற்றது. இதில், கூடுதல் தலைமை செயலாளர் ஏ.கே.சிங், 2021 வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்களை அறிவித்தார். இந்த வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கை, மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்து கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன பதிவில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் பங்கு 12 சதவீதமாக (32 ஆயிரம்) உள்ளது. ஆனால் இது பெரிய எண்ணிக்கை இல்லை என மஹாராஷ்டிரா அரசு நினைக்கிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் மஹாராஷ்டிரா தலைசிறந்து விளங்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் 18 ஆயிரம் பேருந்துகள் உள்ளன.

இதில் 15 சதவீத பேருந்துகளை வரும் 2025ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து புதிய அரசாங்க வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான நகரங்களில், அனைத்து புதிய அரசாங்க வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். இப்படி பல்வேறு வழிகளின் மூலமாக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மிகவும் தீவிரமாக இருந்து வருகின்றன. குஜராத் மாநில அரசு கூட தற்போது அகமதாபாத் நகரில் 50 புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications







