புதிய Celerio காரின் அறிமுகம் எப்போது? அதிக மைலேஜை தருமாம்... Maruti Suzuki அறிவிப்பு!
மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஹேட்ச்பேக் ரக காரின் அறிமுகம் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

மாருதி சுசுகி நிறுவனம் புதிய அவதாரத்தில் உருவாகி இருக்கும் செலிரியோ ஹேட்ச்பேக் ரக காருக்கான புக்கிங்கை நேற்றைய (நவம்பர் 2) தினம் இந்தியாவில் தொடங்கியது. வெகு நாட்களாக இக்காரின் விற்பனை எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் மிக விரைவில் அது தொடங்கப்பட இருக்கின்றது. இதற்கான முதல் கட்டமாகவே நேற்றைய தினம் புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில், மாருதி சுசுகி செலிரியோ எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 10 தேதி அன்றே புதுப்பிக்கப்பட்ட செலிரியோ ஹேட்ச்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இதை முன்னிட்டே நேற்றைய தினம் விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக நிறுவனம் புக்கிங் பணிகளை தொடங்கியுள்ளது.

ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் புதிய செலிரியோ காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தைப் போலவே வரும் காலத்திலும் மாருதி சுசுகி செலிரியோ அதிக விற்பனையைப் பெறும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட தோற்றம், புதுமையான உட்பகுதி, கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் அதிக பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றால் மாருதி சுசுகி அலங்கரிக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

முன்பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட க்ரில், மிகவும் போல்டான பட்டைகள் என செலிரியோவின் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றத்தை சமீபத்தில் ஸ்பை செய்யப்பட்ட செலிரியோவின் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆம், செலிரியோ கார் மிக விரைவில் விற்பனைக்கு வருவதை முன்னிட்டு பல மாதங்களாக தீவிர பலபரீட்சைக்கு உட்படுத்தி வந்தது.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையிலேயே இறுதியாக விற்பனைக்கான அறிமுகத்தை செலிரியோ பெற இருக்கின்றது. செலிரியோவின் அறிமுகம் தள்ளிபோக செமிகன்டக்டர் பற்றாக்குறை மற்றும் கொரோனா வைரஸ் பரவல் ஆகியவையும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உலகளவில் செமிகன்டக்டர் சிப் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகின்றது.

இதனால், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும்கூட பாதிக்கப்பட்டிருக்கின்றன. மிக சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செமி கன்டக்டர் பற்றாக்குறையால் மின்சார வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் ஆறு மாதங்கள் வரை அதிகரித்திருப்பதாகவும், பிற வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் இரண்டு மாதங்கள் வரை அதிகரித்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது.

இவ்வாறு உலக நாடுகளில் உள்ள அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களையும் செமிகன்டக்டர் சிப் பற்றாக்குறை புரட்டி போட்டு வருகின்றது. இந்த நிலையால் உற்பத்தி பாதிப்பு மற்றும் உரிய நேரத்தில் வாகனங்களை டெலிவரி கொடுக்க முடியாமல் வாகன உற்பத்தியாளர்கள் கடும் சிக்கலில் தவித்து வருகின்றனர். இதனால் பல நிறுவனம் பெரும் இழப்பில் சிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது புதுப்பிக்கப்பட்ட செலிரியோ கார் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் துணிச்சலுடன் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரை அதிக மைலேஜ் திறனுடன் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதன் மைலேஜ் விபரம் பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் அதுகுறித்த தகவல் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கார்குறித்த டீசர் வீடியோவையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் எந்த ஒரு புதுமுக வாகனங்களையும் இந்தியாவில் களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்து. நிறுவனம், இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்கள் சிலவற்றை மட்டுமே நாட்டில் விற்பனைக்குக் கொண்ட வந்த வண்ணம் இருக்கின்றது. சிஎன்ஜி இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்களைக் களமிறக்குவதிலும் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றது. இதுமட்டுமின்றி ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வசதிக் கொண்ட மற்றும் ஹைபிரிட் திறன் கொண்ட வாகனங்களைக் களமிறக்கும் பணிகளிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

அதேவேலையில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்குவதற்கான திட்டம் இப்போதைக்கு இல்லை என நிறுவனம் மிக திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. இது நிறுவனத்தின் மின்சார கார்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதுகுறித்து அண்மையில் ஓர் நிகழ்வில் பேசிய நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா, இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார் மாடல்களை வெளியிடுவதற்கு முன் மின் வாகனங்களுக்கான தேவை நாட்டில் அதிகளவில் இருக்க வேண்டும் என்பதை தான் விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து, நிறுனம் 2025ம் ஆண்டிற்கு பின்னரே எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்கும் என்ற தகவலும் வெளியிடப்பட்டது.


Click it and Unblock the Notifications








