உற்பத்திக்கு தயாராகிய மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது இதன் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்...
மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் மின்சார காரான வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் புகைப்படம் மற்றும் தகவலையே இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் வேகன்-ஆர் கார் மாடலும் ஒன்று. இது ஓர் விலைக்குறைந்த ஹேட்ச்பேக் காராகும். மேலும், நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் மாடலிலும் ஒன்றாக இது இருக்கின்றது. இந்த பிரபலமான கார் மாடலிலேயே மாருதி நிறுவனம் மின்சார வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உற்பத்திய தயாராகி இருக்கும் அக்கார்குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார், ஹூண்டாய், எம்ஜி ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவின் மின்சார நான்கு சக்கர வாகன சந்தையில் நுழைந்துவிட்டன. இதில் டாடா மோட்டார்ஸ் விற்பனைச் செய்து வரும் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை மிக குறைந்த விலையில் விற்பனையாகி வரும் மின்சார காராகும்.

அநேகமாக மாருதி சுசுகி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்த பின்னர் இதுவே இந்தியாவின் மிகக் குறைந்த விலைக் கொண்ட மின்சார காராக இருக்கும் கூறப்படுகின்றது. எனவேதான் மின்வாக பிரியர் வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரின் வருகையை நோக்கி காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.

Image Courtesy 1 to 5 : Prabhat Rana/Rushlanespylance
இம்மாதிரியான சூழ்நிலையில் உற்பத்தி தயாராகி இருக்கும் வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மேலும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. வெள்ளை நிறத்தில் உருவாகியிருக்கும் வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரின் புகைப்படமே முகப்புத்தகம் பேஜ் ஒன்றின் வாயிலாக வெளி வந்திருக்கின்றது.

முன்னதாக, வேகன்ஆர் மின்சார கார் வர்த்தக துறைக்காகவே பிரத்யேகமாக தயாராகி வருவதாக மாருதி சுசுகி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆகையால், தனி நபரால் இந்த காரை வாங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், இதன் விலையோ தனி நபர் பயன்பாட்டிற்கும் இக்காரை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை எதிர்பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மின்சார காராக தயாராகி வரும் மாருதி சுசுகி வேகன்ஆர் ரூ. 9 லட்சம் என்ற குறைந்தபட்ச விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அறிமுகம் வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் ஆகிய மாதங்களில் அரங்கேறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் மின் வாகன சந்தை மெல்ல மெல்ல வளர தொடங்கியிருக்கின்றது. எனவேதான், பெரும் நிறுவனங்களுடன் சேர்ந்து ஆரம்பநிலை நிறுவனங்களின் தங்களின் புதுமுக வாகனங்களை நாட்டில் களமிறக்க தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில், மிக விரைவில் மஹிந்திரா நிறுவனமும் மிக விரைவில் இகேயூவி100 மற்றும் இஎக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களிலான மின்சார கார்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதுதவிர டெஸ்லா நிறுவனமும் அதன் மாடல் 3 மின்சார காரையும் இந்தியாவில் களமிறக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறு போட்டிகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நேரத்திலேயே மாருதி சுசுகி நிறுவனம் அதன் முதல் மின்சார காரான வேகன்ஆர் காரை உற்பத்தி தயாராக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








