டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விலையில் டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனவே வாடிக்கையாளர்கள் அனைவரும் போட்டி போட்டி கொண்டு டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்தனர். இதன்பின் மேலும் 10 ஆயிரம் பேருக்கு, இந்த அறிமுக சலுகை விலை நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 20 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்து விட்டன. இந்த சூழலில் மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிமுக சலுகை விலையிலேயே டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே வரும் நாட்களில் இன்னும் முன்பதிவுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக டியாகோ எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் காத்திருப்பு காலம் குறையும். எனவே வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டன. முதற்கட்டமாக 2 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் லாங் ரேஞ்ச் வெர்ஷன் டெலிவரி மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இதில் 24 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 19.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட மாடலை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரானது, XE, XT, XZ Plus மற்றும் XZ Plus Tech Lux ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இதற்கிடையே குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் செயல்பட்டு வந்த ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையை கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக கைப்பற்றியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம்தான் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறிய நிலையில், டாடா அதன் தொழிற்சாலையை கையகப்படுத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கு இந்த தொழிற்சாலை உதவி செய்யும். இதற்கிடையே நடப்பு 2023ம் ஆண்டில் பன்ச் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டியாகோ எலெக்ட்ரிக் காருடன், நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக வெகு சமீபத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாகவும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. எனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையை போல் முதலிடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டுமென்றால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
பன்ச் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் தவிர புதிய சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த 2 சிஎன்ஜி கார்களும் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 புதிய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








