மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புத்தம் புது ஸ்விப்ட்: களமிறக்கியது மாருதி

மும்பை லலித் அசோக் ஓட்டலில் நடந்த பிரம்மாண்ட விழாவில், புதிய ஸ்விப்ட் காரை மாருதி சுஸுகி மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சின்ஷோ நகனிஷி பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விப்ட் கார் வாடிக்கையாளர் நெஞ்சங்களில் முத்திரை பதித்த காராக வலம் வந்தது. இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக மாருதி அறிவித்ததும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முறைப்படி இந்த கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டபோதிலும், இதுவரை 45,000கார்களுக்கு மேல் புக்கிங் செய்து சாதனை படைத்துள்ளது புதிய ஸ்விப்ட். வேறு எந்த காரும் இதுவரை செய்யாத சாதனை அளவாக இது கருதப்படுகிறது.
புதிய ஸ்விப்ட் கார் பற்றி வாடிக்கையாளர்களின் கனவை நனவாக்கும் அம்சங்களுடன் புதிய ஸ்விப்ட் கார் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பார்ப்பதற்கு பழைய ஸ்விப்ட் கார் போன்றே அச்சு அசலான தோற்றத்தில் இருந்தாலும், இந்த கார் புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காரை அறிமுகம் செய்து வைத்தபின் விழாவில் பேசிய மாருதி சுஸுகி தலைமை செயல் அதிகாரி சின்ஷோ நகனிஷி கூறியதாவது:
"பழைய காருக்கு அதிக டிமான்ட் இருக்கும் நிலையில், புதிய ஸ்விப்ட் காரை அறிமுகம் செய்துள்ளோம். இருந்தாலும், மார்க்கெட்டில் புதிய ஸ்விப்ட் கார் பல புதிய சாதனை எல்லைகளை எட்டும்.
அதிக மைலேஜ், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு என வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அம்சங்களை புத்தம் புது ஸ்விப்ட் நிறைவேற்றும் என உறுதி கூறுகிறோம்.
புதிய ஸ்விப்ட் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் புதிய ஸ்விப்ட் டிசையர் செடான் காரையும் அடுத்த 6-8 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளோம்," என்றார்.
ரூ.4.22 லட்சம் முதல் ரூ.6.38 லட்சம் விலையில் புதிய ஸ்விப்ட் மாடல்கள் கிடைக்கும் என மாருதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








