கார்களின் விலையை 5 விழுக்காடு வரை உயர்த்தும் ஆடி

உற்பத்தி செலவீனம் உயர்வு, போக்குவரத்து செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கார் விலையை பல முன்னணி நிறுவனங்கள் உயர்த்திவிட்டன. இந்த வரிசையில் தற்போது சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் ஆடி கார் நிறுவனம் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறுகையில்," டீசல் விலை உயர்வால் கார்களை அனுப்புவதற்கான போக்குவரத்து செலவீனம் உயர்ந்துவிட்டது. இதேபோன்று, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பும், ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கமும் கார் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
க்யூ3 எஸ்யூவி விலை மட்டும் சமீபத்தில் உயர்த்தியது ஆடி. இந்தநிலையில், மீண்டும் ஆடி நிறுவனம் 5 விழுக்காடு வரை கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்ற தகவலை ஆடி தெரிவிக்கவில்லை.
ஏ-4, ஏ-6, ஏ-8 ஆகிய செடான் மாடல்களையும், க்யூ-3, க்யூ-5, க்யூ-7 ஆகிய எஸ்யூவி கார்களையும், ஆர்-8 ஸ்போர்ட்ஸ் காரையும் ஆடி இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இவை ரூ.27.85 லட்சம் முதல் ரூ.1.7 கோடி விலை வரை விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








