வாகன பெருக்கத்தில் ராக்கெட் வேகத்தில் பெங்களூர்: டெல்லியை விஞ்சுமா?

கடந்த 2 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய நகரங்களாக திகழும் பெங்களூர் மற்றும் ஐதராபாத் நகரங்களில்தான் வாகன பெருக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. தகவல்தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியால் தனி நபர் வருவாய் அதிகரித்துள்ளதால் பிற மாநகரங்களை காட்டிலும் இந்த இரு நகரங்களிலும் வாகனப் பெருக்கம் ஏகத்துக்கும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் 4.76 லட்சம் வாகனங்களும், பெங்களூரில் 2.72 லட்சம் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், நடப்பு ஆண்டில் இதுவரை டெல்லியில் 3.99 லட்சம் வாகனங்களும், பெங்களூரில் 3.28 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில் இதுவரை 50,000 வாகனங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ஐதராபாத் நகரிலும் வாகன பெருக்கம் அதீதமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், நாட்டின் முக்கிய பெரு நகரங்களாக குறிப்பிடப்படும் சென்னை, கோல்கட்டா மற்றும் மும்பையில் வாகன பெருக்கத்தின் வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2011ல் சென்னையில் 2.26 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நடப்பு ஆண்டில் இதுவரை சென்னையில் 1.91 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நடப்பு ஆண்டில் மும்பையில் 1.60 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 1,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில், 80 விழுக்காடு இருசக்கர வாகனங்கள் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பெங்களூரில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சாலைகளில் கால் வைக்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல் மட்டுமில்லாமல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மாற்று வழியை தேடுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








