ஹலோல் ஆலையின் உற்பத்தியை வெகுவாக உயர்த்தும் ஜிஎம்

செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம், ஹலோலில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. ஆண்டுக்கு 85,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனை இந்த ஆலை கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சில கார் மாடல்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் இந்திய மார்க்கெட்டிலிருந்து விடை கொடுத்து வருகிறது. அதற்கு மாற்றாக புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், செயில் யுவா ஹேட்ச்பேக் காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, செயில் செடான் காரையும் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், புதிய கார்களின் விற்பனை இலக்கு மற்றும் எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு ஹலோல் ஆலையை விரிவுப்படுத்த இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பாலேந்திரன் குறிப்பிடுகையில்,"ஹலோல் ஆலையின் உற்பத்தி திறன் மிகவும் குறைந்ததாக இருக்கிறது. எனவே, எதிர்கால தேவையை கருத்தில்க்கொண்டு ஹலோல் ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 1.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் உயர்த்த இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








