பெரும் முதலீட்டு திட்டத்துடன் சீனாவில் இறங்கிய ஜாகுவார் லேண்ட்ரோவர்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பிரிட்டிஷ் பிராண்டுகளான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் நிறுவனங்களை கடந்த 2008ல் டாடா கையகப்படுத்தியது. அதுமுதல் டாடா செய்து வரும் தொடர் முதலீட்டு திட்டங்களால் அந்த இரு நிறுவனங்களும் நல்ல வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளன.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றன ஜாகுவார்-லேண்ட்ரோவர் நிறுவனங்கள். வர்த்தக விரிவாக்கத்தின் பொருட்டு, பல்வேறு நாடுகளில் கால் பதிக்கும் முயற்சிகளை அந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. மேலும், இந்தியாவிலும் லேண்ட்ரோவர் கார்களை அசெம்பிளிங் செய்யும் பணிகளை ஜாகுவார்-லேண்ட்ரோவர் நிறுவனங்கள் துவங்கியுள்ளன.
இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய கார் சந்தையாக விளங்கும் சீனாவில் ஜாகுவார்-லேண்ட்ரோவர் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. சீனாவை சேர்ந்த பிரபல செர்ரி கார் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து அங்கு கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளன. இதற்கான அனுமதியை சீன அரசு சமீபத்தில் வழங்கியது.
50:50 என்ற முதலீட்டு விகிதத்தில் ஜாகுவார்-லேண்ட்ரோவருக்கும், செர்ரி நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும், இந்த கூட்டணி ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க உள்ளது. இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.
மேலும், சீன மார்க்கெட்டுக்கு தக்கவாறு புதிய கார் மாடல்களையும் வடிவமைத்து அறிமுகப்படுத்தவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. முதலில் லேண்ட்ரோவர் கார்களும், பின்னர் ஜாகுவார் கார்களையும் அங்கு அசெம்பிளிங் செய்து விற்பனை செய்ய இந்த புதிய கூட்டணி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








