அஸ்டன் மார்ட்டினை வாங்குவதற்கு மஹிந்திராவுக்கு வாய்ப்பு!

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அஸ்டன் மார்ட்டின் விற்பனைக்கு வந்துள்ளது குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டினை வாங்குவதற்கு உலகின் முன்னணி வாகன நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களும் அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாக தெரிவித்திருந்தோம்.
அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் 64 விழுக்காடு பங்குகளை குவைத் நாட்டை சேர்ந்த இன்வெஸ்ட்மென்ட் தார் கோ., நிறுவனம் வசம் இருக்கிறது. இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் பங்குகளை தார் கோ., நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விற்பனையை வெற்றிகரமாக முடித்து தருவதற்கு ரோத்சைல்டு என்ற நிறுவனத்தை தார் கோ., நிறுவனம் நியமித்திருக்கிறது.
இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்தும் வாய்ப்பு மஹிந்திராவுக்கு கிட்டும் என்று தெரிகிறது. இதற்கான முறைப்படியான அறிவிப்புகள் இந்த வார இறுதியில் வெளியாக உள்ளது. உலகப் புகழ்பெற்ற ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய பிரிட்டிஷ் பிராண்டுகளை டாடா கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மற்றுமொரு பிரிட்டிஷ் பிராண்டான அஸ்டன் மார்ட்டினை மஹிந்திரா கையகப்படுத்துவது உறுதியாகிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








