மீண்டும் சூடுபிடித்த பெட்ரோல் கார் விற்பனை: காரணம் என்ன?

அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் டீசல் கார் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியது. இதனால், பெட்ரோல் கார்களுக்கான மவுசு கிடுகிடுவென சரிந்தது. மேலும், மார்க்கெட் தேவையை உணர்ந்து டீசல் கார் உற்பத்திக்கு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடு்க்க துவங்கின.
டீசல் கார் விற்பனை நன்கு வளர்ச்சி கண்டபோதிலும், நமது நாட்டில் என்ட்ரி லெவல் மார்க்கெட்டில் பெட்ரோல் கார்களே இருக்கும் நிலையில், விற்பனை பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த கார் மார்க்கெட்டின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், கார் நிறுவனங்கள் கவலையடைந்தன. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் பெட்ரோல் கார்களின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெட்ரோல் கார்களின் விற்பனையில் 3 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை அதிகரித்திருக்கிறது. தந்திராஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளால் கார் விற்பனை அதிகரித்தாலும் பெட்ரோல் கார்களுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. செப்டம்பரில் டீசல் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டதே பெட்ரோல் கார்கள் மீதான திடீர் மவுசுக்கு காரணமாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பெட்ரோல் கார்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது கார் நிறுவனங்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த செப்டம்பரில் டீசல் கார்கள் 57 விழுக்காடு மார்க்கெட் பங்களிப்பையும், பெட்ரோல் கார்கள் 43 விழுக்காடு மார்க்கெட் பங்களிப்பையும் கொண்டிருந்தன. ஆனால், அக்டோபரில் டீசல் கார்களின் மார்க்கெட் பங்களிப்பு 48 விழுக்காடாகவும், பெட்ரோல் கார்களின் பங்களிப்பு 46 விழுக்காடாகவும், கிட்டதட்ட சரிசமமான அளவுக்கு வந்திருக்கிறது.
மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் உள்ளிட்ட கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் கார்களுக்கான இந்த திடீர் மவுசு குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் கூறுகையில்," அக்டோபரில் பீட் காரின் பெட்ரோல் மாடல் விற்பனை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால், பீட் காரின் ஒட்டுமொத்த விற்பனை 20 விழுக்காடு உயர்ந்தது. இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது," என்றார்.
இதேபோன்று, டொயோட்டா நிறுவனத்தின் லிவா, எட்டியோஸ் கார்களின் பெட்ரோல் மாடல்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. டொயோட்டா துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்," டீசல் கார்களைவிட பெட்ரோல் கார்களின் விலை வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக இருப்பது பெட்ரோல் கார்களின் விற்பனை மீண்டும் எழுச்சிப் பெறுவதற்கு முக்கிய காரணம்," என்று தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாக இருந்தபோதிலும், பொதுவாக, பண்டிகை காலத்தில் ஏராளமான புதிய மாடல்களின் வரவும், பெட்ரோல் கார்களுக்கு முன்னணி நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கியதும் விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறலாம். அடுத்து வரும் மாதங்களில் இதேநிலை நீடித்தால் மட்டுமே அது நிரந்தர வளர்ச்சியாக கருதமுடியும்.


Click it and Unblock the Notifications








