2-ம் இடத்திற்கு ஹூண்டாய், மஹிந்திரா, டாடா இடையே போட்டி!

கார் மார்க்கெட்டில் எவ்வித இடையூறும் இல்லாமல் மாருதி முதலிடத்தில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தற்போது இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. மாருதியின் முதலிடத்தை தற்போதைக்கு எந்த நிறுவனத்தாலும் அசைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், இரண்டாம் இடத்திற்கு அதுபோன்ற நிலை இல்லை. இரண்டாம் இடத்தை தக்கவைப்பது ஹூண்டாய்க்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார் விற்பனையை வைத்து பார்க்கும்போது அதிக வித்தியாசங்கள் இல்லை. ஏப்ரல்-அக்டோபர் இடையிலான காலகட்டத்தில் மாருதி நிறுவனம் 5,69,220 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 2,20,001 கார்களையும், டாடா மோட்டார்ஸ் 1,96,852 கார்களையும், மஹிந்திரா நிறுவனம் 1,74,651 கார்களையும் விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், இரண்டாம் இடத்தை தக்க வைக்க ஹூண்டாயும், அந்த இடத்திற்கு தங்களை முன்னேற்றுவதற்கு டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் புதிய வியூகங்களை வகுத்து தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.
அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள அதேவேளையில், டீலர் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்தவும் இந்த கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குட்டி இண்டிகோ மற்றும் டீசல் நானோ காரை களமிறக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், எளிதாக தனது கார் விற்பனையை அதிகரிக்க முடியும் என்பது திட்டம்.
இதோபோன்று, ஹூண்டாய் நிறுவனம் ஐ10 டீசல் உள்ளிட்ட புதிய டீசல் மாடல்களை களமிறக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. மஹிந்திரா நிறுவனமும் யுட்டிலிட்டி கார் செக்மென்ட் மூலம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவதற்கு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. மேலும், 4 மீட்டருக்கும் குறைவான வெரிட்டோவும் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
அடுத்து வரும் ஆண்டுகளில் 2-ம் இடத்தை எந்தவொரு நிறுவனமும் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். 2-ம் இடத்தை ஹூண்டாய் தக்க வைக்குமா அல்லது உள்நாட்டு நிறுவனங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








