பெட்ரோல் நிலையத்தில் பகல் கொள்ளை- இதோ ஆதாரம்!!
பெங்களூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் தமிழ் ஒன்இந்தியாவில் ஒரு சிறப்பு செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி இதுபோன்று ஏமாற்று வித்தைகளை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், பெங்களூர், ஜே.பி., நகரில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போடும்போது வாடிக்கையாளரிடம் ரூ.270 வரை மோசடி செய்ய முயன்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியிருக்கிறார் பெங்களூரை சேர்ந்த மணிஷ் துபே. ஆனால், ஊழியர்கள் கிரெடிட் கார்டு பணம் செலுத்தியதற்கான பில்லில் கையெழுத்து வாங்குவதுபோல் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். அடுத்த நொடியில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டதாக மீட்டர் காண்பித்துள்ளது.
ஆனால், சந்தேகமடைந்த மணிஷ் துபே ஊழியரிடம் சண்டை போட்டு பில்லை வாங்கி பார்த்துள்ளார். அதில், ரூ.731க்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பியது அம்பலமானது. இதையடுத்து, பெட்ரோல் பங்க் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி, மீதமுள்ள தொகைக்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூர் மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் இதுபோன்ற பகல் கொள்ளை அடிக்கும் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் விலை உச்சாணியில் இருக்கும் நிலையில், ஊழியர்கள் இதுபோன்று ஏமாற்றுவது பல வித இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
சில சமயம் மைலேஜ் தரவில்லையா என்று மெக்கானிக்குகளிடம் கொண்டு சென்று, அலையாய் அலையும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இதுகுறித்து வரும் புகார்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








