டீசல் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்ததா? - வால்வோ விளக்கம்
"பிரத்யேக பாகங்களால் பஸ்சின் டீசல் டேங்க் வடிவமைக்கப்படுவதால், வெடிப்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு வால்வோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த புதன்கிழமை பெங்களூரிலிருந்து, ஆந்திர தலைநகர் ஹைதராபாத்துக்கு சென்ற வால்வோ பஸ் மெகபூப் நகரில் மாவட்டத்தில் தீப்பிடித்து பெரும் விபத்தில் சிக்கியது.
பஸ்சில் பயணம் செய்த 45 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த பஸ் விபத்துக்கான காரணம் குறித்து உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில், டீசல் டேங்க் வெடித்து சிதறியதால் பஸ்சில் தீ வேகமாக பரவியதே அதிக உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை வால்வோ மறுத்துள்ளது.

டீசல் டேங்க் வெடித்ததா?
சாலை தடுப்பில் மோதி டீசல் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்து இருக்கலாம் என்றும், டயர் வெடித்து தீப்பற்றியிருக்கலாம் என்றும் குழப்பமான தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பஸ்சில் எளிதில் தீப்பற்றக்கூடிய கெமிக்கல் அல்லது பட்டாசுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விசாரணை குழு
இந்த விபத்து தொடர்பாக, விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், பஸ்சில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து வால்வோ நிறுவனமும் நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

வால்வோ விளக்கம்
இந்த நிலையில், டீசல் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு வால்வோ நிபுணர் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், பிற பஸ்கள் போன்று வால்வோ பஸ்களின் டீசல் டேங்க் உலோகங்கள் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, வால்வோ பஸ்களின் டீசல் டேங்க் ரோட்டோ மோல்டடு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டது. எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த டீசல் டேங்க் தீப்பிடிக்க வாய்ப்பு மிக மிக குறைவு என்று தெரிவித்துள்ளது. அதேவேளை, விசாரணை முடிந்தவுடனே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அந்த குழு கூறியுள்ளது.

கெமிக்கல் காரணமா?
வால்வோ நிறுவனம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ள நிலையில், விபத்துக்குள்ளான பஸ்சில் எளிதில் தீப்பற்றும் அபாயம் இருக்கும் பெட்ரோல் கெமிக்கல் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத டிராவல்ஸ் நிறுவன பணியாளர் ஒருவர் கூறுகையில், பஸ்சின் கீழ்பாகத்தில் 4 டன் வரை பொருட்களை எடுத்துச் செல்வதற்கான இடவசதி இருக்கும். அதில், பெயிண்ட் தயாரிக்கப் பயன்படும் கெமிக்கல்கள் 10 லிட்டர் மற்றும் 20 லிட்டர் கேன்களில் வைத்து பெங்களூர் - ஹைதராபாத் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் எடுத்துச் செல்வது வழக்கமாக நடக்கிறது. இதுபோன்று, விபத்துக்குள்ளான பஸ்சிலும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.

பட்டாசு
பட்டாசு எடுத்துச் செல்லப்பட்டதாலும் இதுபோன்று விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்று அனுப்பப்படும் பார்சல்கள் குறித்து டிராவல்ஸ் ஏஜென்சிகளுக்கே தெரியாத நிலை இருக்கிறது. அதாவது, விமான நிலையங்கள் போன்று ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் இல்லாததும், பார்சல்களை சோதிக்காமல் டிராவல்ஸ் நிறுவனங்கள் ஏற்றுவதும் இதுபோன்ற பெரும் துயரங்களுக்கு காரணமாகி வருகிறது.

மறுப்பு
எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எதுவும் பஸ்சில் எடுத்துச் செல்லப்படவில்லை என ஜாஃபர் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








