அனைத்து வால்வோ பஸ்களிலும் அவசரகால வழி அமைக்க கர்நாடக அரசு உத்தரவு!
அனைத்து பஸ்களிலும் உடனடியாக அவசர கால வழி அமைத்து தர வேண்டும்; இல்லையெனில், உங்களிடம் பஸ் வாங்குவதை நிறுத்திவிடுவோம்," என்று வால்வோ நிறுவனத்துக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூரிலிருந்து சென்ற 2 வால்வோ பஸ்கள் சமீபத்தில் அடுத்தடுத்து தீ விபத்தில் சிக்கின. இந்த இரு விபத்துக்களிலும் சேர்த்து 52 பேர் உயிரிழந்தனர்.
பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் சென்றன. மேலும், வால்வோ பஸ்களின் பாதுகாப்பு குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், வால்வோ நிறுவனத்துக்கும், தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும் கர்நாடக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவசர வழி
அனைத்து வால்வோ பஸ்களிலும் உடனடியாக அவசர கால வழி அமைத்து தர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு போட்டுள்ளது. இல்லாதபட்சத்தில், அவசர வழி ஏற்படுத்தாத பஸ்களுக்கு அபாரதம் விதிக்கப்படும், தொடர்ந்து மீறினால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு 3 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

சரியான அமைப்பு
இந்த அவசர கால வழி மிக சரியான உயரத்தில் பயணிகள் எளிதாக வெளியேறும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்லுனர்கள் வருகை
கர்நாடக அரசின் உத்தரவையடுத்து, வால்வோவின் ஸ்வீடன் தலைமையகத்திலிருந்து பொறியாளர் குழு இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளது. பஸ்சில் அவசர கால வழி ஏற்படுத்துவது குறித்தும், இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பல்வேறு ஆய்வுகளை அவர்கள் நடத்த உள்ளதாக வால்வோ இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிரடி
அரசின் உத்தரவை ஏற்று உடனடியாக அவசர வழி ஏற்படுத்தித் தர வேண்டும்; இல்லையெனில், வால்வோ பஸ்களை வாங்குவதை நிறுத்தி விடுவோம்," என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால், வால்வோ கலக்கமடைந்துள்ளது. மேலும், அரசின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கிய மார்க்கெட்
கர்நாடக தலைநகர், பெங்களூர் அருகே அமைந்திருக்கும் ஆலையில்தான் வால்வோ பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கர்நாடகாவில்தான் அதிக வால்வோ பஸ்கள் விற்பனையாகி வருகின்றன. தனியார் மட்டுமின்றி, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் அதிக அளவில் வால்வோ பஸ்கள் வாங்கி இயக்கப்படுகின்றன. வால்வோவின் மிக பெரிய வர்த்தக பங்களிப்பை கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழங்குகின்றன.

தனியாருக்கும் அட்வைஸ்
வால்வோ பஸ்களை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கர்நாடக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. பஸ்களை அதிவேகத்தில் இயக்குவதை தவிர்க்க புதிய வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

போட்டி
இந்திய சொகுசு பஸ் மார்க்கெட்டில் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்பை பெற்று வெற்றிகரமான நிறுவனமாக வால்வோ இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய விபத்துக்கள் அந்த நிறுவனத்துக்கு பெரும் கெட்டப் பெயரை எடுத்துவிட்டன. இதன்காரணமாக, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஸ்கானியா நிறுவனங்கள் பக்கம் டிராவல்ஸ் அதிபர்களின் கண்கள் திரும்பும் என கூறப்படுகிறது. இருப்பினும், போட்டியாளர்களை சமாளிக்க வால்வோ நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வசதிகளையும் தனது பஸ்களில் கொண்டு வர தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








