இந்தியாவில் 74 லட்சம் போலி வாகன ஓட்டுனர் உரிமங்கள்: அதிர்ச்சித் தகவல்!
நம் நாட்டில் 74 லட்சம் போலி வாகன ஓட்டுனர் உரிமங்கள் இருப்பதாக தேசிய தகவலியல் மையம் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
போலி வாகன ஓட்டுனர் உரிமங்கள் குறித்த ஆய்வு ஒன்றை தேசிய தகவலியல் மையம்(NIC) சமீபத்தில் நடத்தியது. அதில், பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் இதுவரை 6 கோடி வாகன ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதில், போலி ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை 74 லட்சமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி வாகன ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதற்கு இடைத்தரகர்கள் முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களையும் ஒரே குடையின் கீழ் இணைக்கும் வகையிலான, ஒருங்கிணைந்த தகவல் இணையதள வசதி இல்லாததும் போலி ஓட்டுனர் உரிமங்கள் பெருகியதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்கள் பற்றிய தகவல்களை சரிபார்க்கும் வசதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இல்லை என்பதும் மற்றுமொரு காரமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய அரசின் புதிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு சட்ட வரைவு மசோதாவில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தகவல் இணையதள வசதி மூலம் காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை தகவல் பதிவேடுகளை மின்னணு முறையில் இணைக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போலி ஓட்டுனர் உரிமங்களை அறவே ஒழிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








