ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த தயாரிப்பாளர்கள் ஆயத்தம்!
ஜனவரி 1 முதல் கார் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான கார் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. செவர்லே மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விலை உயர்வை அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், இதர நிறுவனங்களும் கார் விலையை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார் விற்பனை மந்தகதியில் இருந்ததால், விலை உயர்வை கார் தயாரிப்பு நிறுவனங்கள் தவிர்த்து வந்தன.

இந்த நிலையில், உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதை கருத்தில்கொண்டு கார் விலை உயர்வை கையிலெடுக்க உள்ளன. மேலும், கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கார்களுக்கான கலால் வரிச் சலுகைக்கான காலக்கெடுவும் வரும் 31ந் தேதியுடன் முடிகிறது.
வரிச்சலுகை நீடிப்பு குறித்து மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாததால், இந்த முறை கார் விலை உயர்வு நிச்சயம் இருக்கும் என்றும் தெரிகிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையில் ஹூண்டாய் கார்களின் விலை மாடலுக்கு தகுந்தவாறு உயரும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, மாருதி உள்ளிட்ட கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது. புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கூடுதல் சுமை நிச்சயம் இருக்கும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications








