புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்?!
கலால் வரியில் அளிக்கப்பட்டு வரும் சலுகைக்கான கெடு முடிவடைய இருப்பதால், கார் வாங்குவதற்கு இதுவே தருணமாக ஆட்டோமொபைல் துறையினர் குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த மாதம் கார் விற்பனையில் ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல கார் நிறுவனங்கள் வழக்கத்தைவிட கூடுதல் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார்களுக்கான கலால் வரியில் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் சிறிது முன்னேற்றம் தென்பட்டது.

சில மாதங்களுக்கு முன் மத்தியில் புதிதாக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசும் இந்த வரிச்சலுகைகை டிசம்பர் 31ந் வரை நீடித்தது. இந்தநிலையில், கலால் வரிச்சலுகையை மேலும் நீட்டிக்குமாறு மத்திய அரசை கார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால், அதுபற்றி மத்திய அரசு வாய் திறக்கவில்லை.
இதனால், ஜனவரி முதல் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் நிலை இருக்கிறது. ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களின் விலை ரூ.50,000 வரை உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இந்த மாதமே தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், அனைத்து கார் நிறுவனங்களும் ஆண்டுக் கடைசியில் விற்பனையில் ஏற்படும் மந்தநிலையை கருதி சிறப்புச் சலுகைகளையும் அறிவித்துள்ளன. எனவே, இப்போது புதிய கார் வாங்கினால் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருப்பதோடு, ஜனவரியில் விலை உயர்வினால் ஏற்படும் சுமையை தவிர்க்க முடியும்.
எனவே, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கத்தைவிட கூடுதல் கார்கள் விற்பனையாகும் என்று கார் நிறுவனங்கள் கணக்கு போட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் கார்களின் உற்பத்தி குறைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இந்த ஆண்டு தற்போதுள்ள சூழ்நிலையை கருதி கூடுதலாக கார்களை உற்பத்தி செய்யவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








