வரிச்சலுகை காலக்கெடு முடிகிறது... நாளை முதல் கார் விலை உயர்கிறது!
வாகனங்களுக்கான கலால் வரிச்சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, நாளை முதல் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், வாகனங்களுக்கான கலால் வரிச்சலுகையில் சலுகை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அந்த வரிச்சலுகையை நீட்டித்தது. இந்த நிலையில், வரிச்சலுகைக்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
இதனை நீட்டிக்குமாறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், வாகனங்களுக்கான வரிச்சலுகையை நீட்டிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இன்றுடன் வரிச்சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நாளை முதல் கார் உள்ளிட்ட வாகனங்களின் விலை கணிசமாக உயர்கிறது. மாடல்களுக்கு தகுந்தவாறு ரூ.5,000 முதல் 50,000 வரை விலை உயர்வு இருக்கும்.
சொகுசு கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை விலை உயர்கிறது. ஏற்கனவே கார் விலையை உயர்த்துவதாக மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு அறிவித்துவிட்டநிலையில், தற்போது வரிச்சலுகையும் முடிவுக்கு வருவதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும், 31ந் தேதி வரை காத்திருங்கள், முடிவை சொல்கிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பதால், இன்று ஏதாவது நல்ல முடிவு வருமா என்ற கடைசி நேர எதிர்பார்ப்புடன் வாகன நிறுவனங்களும், கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








