விடைபெறுகிறது ஹூண்டாய் சான்ட்ரோ... அடுத்த மாதம் உற்பத்தி நிறுத்தப்படுகிறது!
செவர்லே ஸ்பார்க் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சான்ட்ரோ காரின் உற்பத்தியை நிறுத்தப் போவதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.
மாருதி கார்கள் மீது மோகம் கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்களின் மனதை வசீகரித்து தன் பக்கம் திரும்பிய மாடல் சான்ட்ரோ ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் கார் மாடலுகூட. தற்போது சான்ட்ரோ ஸிங் என்ற பெயரில் விற்பனையாகி வரும் சான்ட்ரோ கார், மார்க்கெட்டில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து வந்தபோதிலும் சளைக்காமல் போட்டி போட்டு வருகிறது.

இன்றைக்கும் மாதத்திற்கு சராசரியாக 2,900 கார்கள் விற்பனையாகின்றன. இதுவரை 1.36 மில்லியன் சான்ட்ரோ கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளதுடன், 5.35 லட்சம் கார்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் வெற்றிக்கு வித்திட்ட இந்த கார் மாடல் தற்போது தனது அந்திம காலத்தை நெருங்கியுள்ளது.
ஆம், அடுத்த மாதம் சான்ட்ரோ காரின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. புதிய மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்ககும் வகையில், சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் வாடிக்கையாளர்களின் பகட்டு கார் மாடலாக விளங்கி வந்த சான்ட்ரோ உற்பத்தி நிறுத்தப்படுவது சான்ட்ரோ பிரியர்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும். 62 பிஎச்பி பவரை அளிக்கும் 1,086சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட சான்ட்ரோ கார் பெட்ரோல் மற்றும் எல்பிஜி மாடல்களில் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.
தற்போது ரூ.3.07 லட்சம் முதல் ரூ.4.51 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் சான்ட்ரோ கார் யூஸ்டு மார்க்கெட்டிலும் நன்மதிப்பை பெற்ற மாடலாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








