விரைவில் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் : அமைச்சர் பொன்னார் தகவல்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியதில் பெரும்பாலான கார்கள் பூஜ்ய தர மதிப்பீட்டை பெற்றன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு குறைவான கார்களில் பயணம் செய்வது போன்ற உணர்வை அவர்களுக்கு கொடுத்தது.

இந்தநிலையில், சர்வதேச தரத்திற்கு இணையாக கார்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, ராஜ்யசபாவில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கார்களுக்கான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கார்களுக்கான முன்புற மற்றும் பக்கவாட்டு கிராஷ் டெஸ்ட்டுகளை கட்டாயமாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், தேசிய வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, பெரும்பாலான கார்களில் ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தள்ளுபடியுடன் மெட்ஸீலர் ட்யூப்லெஸ் டயர்!
கார்களை மேம்படுத்துவதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து சியாம் அமைப்புடன் ஆலோசனை நடத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் கூறிய அவர், மோட்டார் வாகனச் சட்ட நிலைக்குழுவில் சியாம் அமைப்பும் ஒரு உறுப்பினராக இருக்கும் என்றும் கூறினார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் கிராஷ் டெஸ்ட்டுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








