25 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனை: மாருதி புதிய சாதனை!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 14 ஆண்டுகளில் 25 லட்சம் ஆல்ட்டோ கார்களை விற்பனை செய்து மாருதி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 800சிசி பெட்ரோல் எஞ்சினுடன் ஆல்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.
முதல் 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து காலரை தூக்கி விட்டது மாருதி. மேலும், 2001ம் ஆண்டில் 1.1 லிட்டர் எஞ்சினுடன் ஆல்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அந்த ஆல்ட்டோ கார் மாடலின் விற்பனை 2004ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், 2010ம் ஆண்டில் 1.0 லிட்டர் எஞ்சினுடன் ஆல்ட்டோ கே10 அறிமுகம் செய்யப்பட்டது. 800சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்ட்டோவும் விற்பனையில் இருந்தது. இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் புதிய தலைமுறை ஆல்ட்டோ 800 கார் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் 4 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் ஆல்ட்டோ 800 கார்களை விற்பனை செய்ததாக மாருதி தெரிவித்தது.
இந்த நிலையில், மார்க்கெட்டுக்கு வந்த 14 ஆண்டுகளில் ஆல்ட்டோ பிராண்டில் இதுவரை 25 லட்சம் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. தற்போதும் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஆல்ட்டோ திகழ்கிறது. உலகின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களின் பட்டியலிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், செலிரியோவில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஆல்ட்டோ கே10 காரை அடுத்த ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் குறைவான விலை ஆட்டோமேட்டிக் கார் என்ற பெருமை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம், ஆல்ட்டோ கே10 காரின் விற்பனை நல்ல வளர்ச்சி பெறும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








