காரில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தயார்: மாருதி!
காரில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துமாறு, அரசு கேட்டுக்கொண்டால் அதனை செய்ய தயாராக இருப்பதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குளோபல் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் கார் பூஜ்ய தர மதிப்பீட்டை பெற்றது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், மத்திய அரசுக் கேட்டுக்கொள்ளும்பட்சத்தில், முழு பாதுகாப்பு அம்சங்களை காரில் வழங்கத் தயார் என மாருதியின் உயரதிகாரி ஆர்.சி.கல்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில்," சர்வதேச தர நிலைகளுடன் குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் நடத்தியுள்ளது. எனவே, இந்தியாவில் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கும், குளோபல் என்சிஏபி விதிமுறைகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். இந்தியாவில் வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை பின்பற்றி கார்களை தயாரிக்கிறோம்.
இந்தியாவின் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்றதாக எங்களது கார்கள் இருக்கின்றன. அரசுக் கேட்டுக்கொண்டால் கார்களில் மாற்றங்களையும், பாதுகாப்பு அதிகரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குளோபல் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட் சோதனை குறித்து தேசிய வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கட்டமைப்பு திட்டத்துறை(NATRiP) சிஇஓ., நிதின் ஆர் கோகர்ன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மணிக்கு 64 கிமீ வேகத்தில் அந்த கிராஷ் டெஸ்ட்டுகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், இந்தியாவில் மணிக்கு 56 கிமீ வேகத்தில் மோதி சோதனை செய்யப்படுகின்றன. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை கூடுதலான வேகத்தில் சோதனை செய்யும்போது, அதே முடிவுகளை எதிர்பார்க்க முடியாது," என்று கூறியுள்ளார்.
நடைமுறையில் பார்க்கப்போனால், 64 கிமீ வேகத்திற்கு கூடுதலாக செல்லும் வாகனங்களே அதிகம் விபத்துக்குள்ளாகின்றன. ஆனால், இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் 56 கிமீ வேகத்துக்கும், 64கிமீ., வேகத்துக்கும் ஒப்பிட்டு பேசிக் கொண்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.
கூடுதல் ஆட்டோமெபைல் செய்திகளுக்கு டிரைவ்ஸ்பார்க் தள பக்கத்தில் தொடர்பில் இருங்கள்!


Click it and Unblock the Notifications








