டெல்லியில் எமிசன் சான்று இருந்தால்தான் இனி வாகனங்களுக்கு எரிபொருள்!
வரும் டிசம்பர் 1ந் தேதி முதல் டெல்லியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எமிசன் சான்று இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது என்ற புதிய விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
தலைநகர் டெல்லி வாகன நெருக்கத்தால் விழி பிதுங்கி வருகிறது. இதையடுத்து, வாகனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபடுதலை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, டெல்லியில் வாகனங்களுக்கான புகை பரிசோதனையை கட்டாயமாக்கும் வகையில், புதிய விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, புகை பரிசோதனை சான்று உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அம்மாநில தலைமை செயலாளர் டிஎம். ஸ்போலியா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், போக்குவரத்து துறை மற்றும் மாசுக்கட்டுபாட்டுத் துறையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த மாத இறுதிக்குள் டெல்லியில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும், வாகன புகை பரிசோதனை மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புகை பரிசோதனைக்கான முறையான சான்று இல்லாமல் வரும் வாகனங்களை ஆய்வு செய்யும் வகையில், போக்குவரத்து போலீசார் மற்றும் பணியாளர்களை பெட்ரோல் நிலையங்களில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிரப்பும் பம்ப்புக்கு அருகிலும், பெட்ரோல் நிலையங்களின் வெளியேறும் வழியிலும் இந்த பணியாளர்கள் மற்றும் போலீசார் புகை பரிசோதனை சான்று இல்லாமல் வரும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளையும் டெல்லி போக்குவரத்து துறை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








