மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: புதிய மாற்றங்கள் என்னென்ன?
இந்தோனேஷியாவில், துவங்கியிருக்கும் சர்வதேச கெய்கிண்டோ இந்தோனேஷியா ஆட்டோ ஷோவில், புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாருதி எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் வர இருக்கும் இந்த புதிய மாடல், தோற்றத்திலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன் மாற்றம்
முகப்பில் முப்பட்டை க்ரோம் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட், டிசையர் கார்களை போன்றே பனி விளக்கு அறைக்கு க்ரோம் பட்டை அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் டிசைன் சற்று வித்தியாசம் கொண்டது. பக்கவாட்டில் மாற்றங்கள் இல்லை. பின்புறத்தில், நம்பர் பிளேட்டுக்கு மேலே க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், டெயில் லைட் க்ளஸ்ட்டருடன் சேர்ந்தாற்போல் சிவப்பு எதிரொலிப்பு பட்டை சேர்க்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் புதிய மாருதி எர்டிகா வருகிறது. ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர் ஆகியவை அடர் பழுப்பு வண்ணத்தில் இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கையை 50:50 என்ற விகிதத்தில் மடக்கிக் கொள்ளும் வசதி உள்ளது. பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள், ஓட்டுனர் பக்கத்திற்கு ஆட்டோ அப் பவர் விண்டோ, டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. ஆனால், கூடுதல் மைலேஜ் தரும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ வரை மைலேஜ் தரும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஎம்டி மாடல்
இந்தியாவில் புதுப்பொலிவுடன் வரும் மாருதி எர்டிகா காரில் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உறுதியானத் தகவல் இல்லை.

அறிமுகம்
அடுத்த மாதம் தாய்லாந்தில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








