காற்றில் பறந்து வந்த பெயிண்ட் துகள்களால் 4,000 புதிய ஹோண்டா கார்களில் பாதிப்பு
காற்றில் பரவிய பெயிண்ட் துகள்களால், ஸ்டாக்யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4,000க்கும் அதிகமான புதிய ஹோண்டா கார்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கார்களை டீலர்களுக்கு அனுப்புவதை ஹோண்டா கார் நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் ஹோண்டா கார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் வேறு நிறுவனத்தின் புதிய ஆலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில், பெயிண்ட் அடிக்கும் பகுதியிலிருந்து காற்றில் பரவிய பெயிண்ட் துகள்கள் அருகிலிருந்த ஹோண்டா ஆலையின் திறந்தவெளி கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
கார்களில் இருக்கும் குரோம் பூச்சு கொண்ட பாகங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் பெயிண்ட் துகள்களால் பாதிக்கப்பட்டுவிட்டதாம். கிரேட்டர் நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் மொபிலியோ, பிரியோ மற்றும் சிஆர்வி எஸ்யூவி ஆகியவை பெயிண்ட் துகள்களால் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட கார்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு ஏற்பட்டிருக்கும் கார்களை டீலர்களுக்கு அனுப்புவதை ஹோண்டா கார் நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது.
மேலும், கார்களில் பாதிக்கப்பட்ட பாகங்களை மாற்றும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. சுமார் 4,000க்கும் அதிகமான கார்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஹோண்டாவின் திறந்தவெளி கிடங்கில் கார்களின் இருப்பு வெகுவாக அதிகரித்து நிற்கின்றன. மேலும், மொபிலியோ உள்ளிட்ட கார்களை குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








