இன்று முதல் கனரக வாகனங்களில் ஏபிஎஸ் பொருத்துவது கட்டாயம்!
இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வகை கனரக வாகனங்களிலும் ஆன்ட்டி லாக் பிரேக் சிஸ்டம்(ஏபிஎஸ்) பொருத்துவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நடைபெறும் வாகன விபத்துக்களில் 30 சதவீதத்திற்கும் மேல் பஸ் மற்றும் லாரிகளால் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கனரக வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, இன்றுமுதல் தயாரிக்கப்படும் அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

எந்தெந்த வாகனங்களுக்கு பொருந்தும்
2006ம் ஆண்டு முதல் 40 டன் முதல் 49 டன் வரை எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது 5 டன் அல்லது 9 பேருக்கு மேல் பயணிக்கும் பயணிகள் வாகனங்கள் மற்றும் 12 டன்னுக்கும் அதிக எடை கொண்ட டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஏபிஎஸ் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிக்கும்
ஏபிஎஸ் பொருத்தப்படுவதால் கனரக வாகனங்களின் விலை மாடலுக்கு தகுந்தாற்போல் ரூ.15,000 முதல் ரூ.75,000 வரை அதிகரிக்கும் என தெரிகிறது.

ஏபிஎஸ் சிஸ்டம்
பிரேக் பிடிக்கும்போது சக்கரங்களில் பிரேக் பேடுகள் பூட்டிக் கொள்ளாதவாறு, பிரேக் பவரை விட்டு விட்டு சீராக செலுத்தி வாகனத்தை நிறுத்தும் தொழில்நுட்பம்தான் ஏபிஎஸ் சிஸ்டம்.

என்ன பயன்?
கனரக வாகனங்களில் ஏபிஎஸ் பொருத்துவதன் மூலம் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பரிசீலனை
கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கார் மற்றும் சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இதற்குண்டான நடவடிக்கைகள் மற்றும் பரிசீலனைகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








