போனியாகலை... ஸ்டைல் எம்பிவி கார் உற்பத்தியை நிறுத்தியது அசோக் லேலண்ட்!
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஸ்டைல் எம்பிவி கார் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. இனி கனரக வாகன மார்க்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நிசான் நிறுவனத்தின் கூட்டணியில் சிறிய மற்றும் நடுத்தர வகை வர்த்தக வாகனங்களை அசோக் லேலண்ட் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், நிசான் நிறுவனத்தின் எவாலியா எம்பிவி காரை சிறிய மாறுதல்களை செய்து தனது பிராண்டில் வெளியிட்டது.

ஸ்டைல் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த எம்பிவி கார் டாக்சி மார்க்கெட்டை குறித்து வைத்து நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், நிசான் எவாலியா போன்றே, ஸ்டைலுக்கும் போதிய வரவேற்பு இல்லை. எனவே, ஸ்டைல் எம்பிவி கார் உற்பத்தியை அசோக் லேலண்ட் நிறுத்திவிட்டது.
இனி பஸ் மற்றும் டிரக் மார்க்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தப்போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் புதிதாக பஸ் அசெம்பிள் செய்யும் ஆலைகளை திறக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து முக்கிய உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்து, அங்கு பஸ்களை கட்டமைக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








