சர்வதேச பாதுகாப்பு தரம் இல்லாத கார்களுக்கு அஸ்ஸாம் அரசு அதிரடி தடை!!
சர்வதேச கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு தரம் இல்லாத கார் மாடல்களை விற்பனை செய்வதற்கு, அஸ்ஸாம் அரசு அதிரடி தடைவிதித்துள்ளது. இதனால், அங்கு ஸ்விஃப்ட், ஐ10 உள்ளிட்ட பல முன்னணி கார் மாடல்களை பதிவு செய்வதற்கும், விற்பதற்கும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களின் கார் விற்பனையில், அஸ்ஸாம் மாநிலம்தான் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மொத்த கார் விற்பனையில் 12 சதவீதத்தை அஸ்ஸாம் வழங்கி வருகிறது. இந்தநிலையில், அஸ்ஸாமில் விற்பனையாகும் கார்களில் பாதுகாப்பு பிரச்னையை சுட்டிக் காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுதான் இப்போது இந்த தடை விதிக்க காரணமாகியிருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," மலைப் பிரேதசமான அஸ்ஸாம் மாநிலத்தில், கார்களில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது அவசியமாகிறது. எனவே, குளோபல் என்சிஏபி உள்ளிட்ட சர்வதேச அளவிலான அமைப்புகளின் பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்ட மாடல்களை மட்டுமே, அஸ்ஸாமில் விற்பனை செய்ய வேண்டும் என்று கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்காலத் தடை
இந்த மனுவை விசாரித்த கவுஹாத்தி நீதிமன்றம், கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத கார்களின் விற்பனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு அம்சங்களில் குறை இருப்பதாக கருதப்படும், கார்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் அஸ்ஸாம் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அங்கு 140 கார்களின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னணி கார் மாடல்கள்
மாருதி ஸ்விஃப்ட், ஆல்ட்டோ, ஹூண்டாய் ஐ10, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பல முன்னணி கார் மாடல்களை அங்கு பதிவு செய்யவும், விற்கவும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சிறிய வகை கார்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த அதிரடி தடை உத்தரவால் பல கார் நிறுவனங்களின் விற்பனையில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

விளக்கம்
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கார் நிறுவனங்கள் இந்தியாவின் பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு கார்களை தயாரிக்கிறோம். மேலும், இந்த தடை குறித்து கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம் என்று கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தவிர, மேல்முறையீட்டில் சாதகமான தீர்ப்பு வரும் என்றும் கார் நிறுவனங்கள் நம்புகின்றன.

2017 வரை அவகாசம்
வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் புதிய கிராஷ் டெஸ்ட் தர மதிப்பீட்டு அம்சங்களை பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. புனேயில் உள்ள அராய் சோதனை மையத்தில், புதிய பாதுகாப்பு விதிகளின்படி, கிராஷ் டெஸ்ட் நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்குள் இப்படி ஒரு தடை வந்திருப்பது கார் தயாரிப்பு நிறுவனங்களை கலங்க செய்திருக்கின்றன.

தோல்வியுற்ற கார்கள்
கடந்த ஆண்டு குளோபர் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தர ஆய்வில், இந்தியாவின் பல கார்கள் கிராஷ் டெஸ்ட் சோதனையின்போது தோல்வியுற்றன. மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, டட்சன் கோ ஆகிய கார்கள் இந்த சோதனையின்போது பூஜ்ய தர மதிப்பீட்டை பெற்று அதிர்ச்சி தந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








