2 மில்லியன் ஆடி சொகுசு கார்களிலும் எமிசன் மோசடி!
ஆடி கார் நிறுவனத்தின் 2 மில்லியனுக்கும் அதிகமான சொகுசு கார்களில் குறைவான மாசு அளவை காட்டுவதற்காக மோசடி சாஃப்ட்வேர் இருப்பதை, அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம், குறைவான புகை அளவை காட்டுவதற்காக மோசடியான சாஃப்ட்வேரை கார்களில் பொருத்தியிருப்பது சமீபத்தில் அம்பலமானது.
இந்த மோசடியை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்தநிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆடி நிறுவனத்தின் கார்களிலும் இந்த மோசடி சாஃப்ட்வேர் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆடி ஒப்புதல்
தனது 2.1 மில்லியன் சொகுசு கார்களில் இந்த எமிசன் சாஃப்ட்வேர் இருப்பதாக ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் 1.42 மில்லியன் ஆடி கார்களில் இந்த சாஃப்ட்வேர் பொருத்தப்பட்டு இருக்கிறதாம். தனது சொந்த நாடான ஜெர்மனியில் மட்டும் அரை மில்லியனுக்கம் அதிகமான கார்களில் இந்த எமிசன் சாஃப்ட்வேர் பொருத்தப்பட்டு இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது.

கார் மாடல்கள்
ஆடி ஏ1, ஏ3, ஏ4, ஏ5, ஏ6, டிடி, க்யூ3 மற்றும் க்யூ5 கார்களில் இந்த மோசடி சாஃப்ட்வேர் பொருத்தப்பட்டிருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது. இந்த செய்தி ஆடி சொகுசு கார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடவடிக்கை
இந்த சூழலில், ஆடி மற்றும் போர்ஷே கார் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தலைவர்களை ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம் அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை, இந்த பிரச்னைக்கு தொடர்புடையதாக கருதப்படும் பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

விசாரணை
இந்த விவகாரம் குறித்து ஃபோக்ஸ்வேகன் முன்னாள் சிஇஓ., மார்ட்டின் வின்டர்கார்னிடம் ஜெர்மனியின் அரசு வழக்கறிஞர் சார்பிலும் விசாரணை துவங்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு சட்ட விதிமுறைகளின்படி, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், யார் மீதும் வழக்கறிஞர் துணையுடன் அரசு வழக்கறிஞரிடம் புகார் பதிவு செய்யலாம். அதில், முகாந்திரம் இருந்தால், தொடர்ந்து முறைப்படியான விசாரணைக்கு அனுமதிக்கப்படும். இந்த விவகாரத்தில் வின்டர்கார்ன் மீது ஃபோக்ஸ்வேகன் தலைமையகம் அமைந்துள்ள பகுதியை சேர்ந்த அரசு வழக்கறிஞர்களிடம் இதுவரை 10க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளனவாம். அதில், ஃபோக்ஸ்வேகனிலிருந்தும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்த புகாரையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை பதவி விலகிய வின்டர்கார்ன், "இந்த மோசடி குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தனது கவனத்திற்கும் எதுவும் வரவில்லை, என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் விளக்கம்
ஆடி கார் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாளர்களான ஜெர்மனியை சேர்ந்த மற்ற இரு நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களில் இதுபோன்ற பிரச்னை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், அந்தந்த நாட்டின் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்ட புகை வெளியிடும் அளவை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








