நம்ம சென்னையில் பாரத் பென்ஸ் பஸ்கள் உற்பத்தி துவங்குகிறது - 12 விஷயங்கள்!
சென்னை அருகே ஒரகடத்தில், ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனத்தின் புதிய பஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலையில் அடுத்த மாதம் முதல் பஸ் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. ஏற்கனவே பாரத் பென்ஸ் பிராண்டில் டிரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக சென்னையில் பஸ் உற்பத்தியையும் டெய்ம்லர் நிறுவனம் துவங்க இருக்கிறது. இந்த புதிய தொழிற்சாலை பற்றிய முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. நல்வரவு
டெய்ம்லர் நிறுவனத்தின் ஆசியாவிற்கான பிராந்திய இணையதள பக்கத்தில் தமிழில் நல்வரவு என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜெர்மன், இந்தி மற்றும் சைனீஸ் மொழிகளில் இருந்தாலும், இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் என இருமொழிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

02. முதலீடு
சென்னை, ஒரகடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் டெய்ம்லர் பஸ் தயாரிப்பு தொழிற்சாலை ரூ.425 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது.

03. ஆலை பரப்பளவு
பஸ் தயாரிப்பு ஆலை 1,13,000 சதுர பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரத்பென்ஸ் டிரக் தயாரிப்பு ஆலை வளாகத்தையொட்டியே புதிய பஸ் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது.

04. உற்பத்தி இலக்கு
முதல்கட்டமாக ஆண்டுக்கு 1,500 பஸ்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. பின்னர் ஆண்டுக்கு 4,000 பஸ்கள் வரை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

05. இரண்டு பிராண்டுகள்
சென்னை ஆலையில் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பாரத் பென்ஸ் ஆகிய இரு பிராண்டுகளிலும் பஸ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

06. இருவகை பஸ்கள்
பின்புறம் எஞ்சின் பொருத்தப்பட்ட உயர்வகை பஸ் மாடல்கள் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டிலும், முன்புறம் எஞ்சின் பொருத்தப்பட்ட சாதாரண வகை மாடல்கள் பாரத் பென்ஸ் பிராண்டிலும் தயாரிக்கப்படும்.

07. மூன்று பிராண்டுகள்
மெர்சிடிஸ் பென்ஸ், பாரத் பென்ஸ் மற்றும் ஃப்யூசோ ஆகிய மூன்று பிராண்டுகளில் பஸ், டிரக் மற்றும் எஞ்சின் தயாரிப்பு வசதி கொண்ட டெய்ம்லரின் ஒரே ஆலை சென்னை ஆலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

08. பஸ் மாடல்கள்
சென்னை ஆலையில் 9டி, 16டி மற்றும் 16டி வகைகளுக்கு மேற்பட்ட பஸ் வகைகள் தயாரிக்கப்பட உள்ளன.

9. பணியாளர்கள்
பஸ் உற்பத்தி பிரிவு 300 பணியாளர்களுடன் செயல்படும்.

10. பாடி கட்டும் பணி
பஸ் பாடி கட்டும் பணியும் இந்த தொழிற்சாலையிலேயே செய்யப்பட உள்ளது. முன்புற எஞ்சின் கொண்ட பாரத் பென்ஸ் பிராண்டிலான பஸ்களின் பாடி கட்டும் பணியை ரைட்பஸ் நிறுவனம் மேற்கொள்ளும்.

11. டீலர்ஷிப் கட்டமைப்பு
தற்போது பாரத் பென்ஸ் டிரக்குகள் விற்பனை செய்யப்பட்டு வரும் டீலர்ஷிப்புகள் வழியாகவே பஸ்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் டீலர்ஷிப் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க டெய்ம்லர் கமர்ஷியல் வெகிக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

12. நிதி உதவி
பஸ் மற்றும் டிரக்குகளுக்கு டெய்ம்லர் நிறுவனத்தின் நிதி நிறுவனம் வழியாக கடனுதவி பெறும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








