இந்தியாவில் மீண்டும் ஃபெராரி... 2 புதிய டீலர்களை நியமித்தது!
இந்தியாவில் மீண்டும் தனது வர்த்தகத்தை புதுப்பித்துக்கொண்டிருக்கிறது ஃபெராரி கார் நிறுவனம். இதற்காக, 2 அதிகாரப்பூர்வ டீலர்களையும் அந்த நிறுவனம் நியமித்திருக்கிறது.
கடந்த 2011ம் ஆண்டு ஷ்ரேயான்ஸ் குழுமத்தை அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தராக நியமித்து இந்தியாவில் நேரடி வர்த்தகத்தை துவங்கியது ஃபெராரி கார் நிறுவனம்.

ஆனால், ஷ்ரேயான்ஸ் குழுமத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் சர்வீஸ் சேவை பற்றி ஃபெராரி நிறுவனத்தின் தலைமைக்கு ஏராளமான புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஷ்ரேயான்ஸ் குழுமத்திற்கு வழங்கப்பட்ட நேரடி வினியோகஸ்தர் என்ற அங்கீகாரத்தை ஃபெராரி ரத்து செய்தது.
இந்த நிலையில், சிறிது இடைவெளிக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் தனது வர்த்தகத்தை நேரடியாக துவங்குகிறது ஃபெராரி கார் நிறுவனம். இதற்காக, டெல்லி மற்றும் மும்பையில் புதிய டீலர்களை அந்த நிறுவனம் நியமித்திருக்கிறது.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு இறுதியிலிருந்து கார் விற்பனையை மீண்டும் துவங்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷ்ரேயான்ஸ் குழுமத்தின் வாயிலாக கலிஃபோர்னியா, 458 இட்டாலியா, 599ஜிடிபி ஃபியாரானோ ஆகிய கார் மாடல்களை ரூ.2.2 கோடி முதல் ரூ.3.4 கோடி வரையிலான விலையில் அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








