ஃபியட் புன்ட்டோ அபார்த் காருக்கு முன்பதிவு ஆரம்பம்!
இந்தியாவில் அபார்த் பிராண்டில் அதிசக்திவாய்ந்த கார் மாடல்களை ஃபியட் கார் நிறுவனம் களமிறக்கி துவங்கியிருக்கிறது. சமீபத்தில் அந்த நிறுவனம் அபார்த் பிராண்டில் முதலாவதாக, அபார்த் 595 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இந்தநிலையில், அபார்த் பிராண்டில் இரண்டாவது மாடலாக அபார்த் புன்ட்டோ காரை அந்த நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. அபார்த் 595 காரைவிட விலையில் குறைவான மாடல் என்பதால், புன்ட்டோ அபார்த் கார் மீது கார் ஆர்வலர்கள் மத்தியில் பேராவலை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், இந்த காருக்கு தற்போது டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

புன்ட்டோ அடிப்படை மாடல்
தற்போது விற்பனையிலுள்ள ஃபியட் புன்ட்டோ எவோ காரின் அடிப்படையிலான பெர்ஃபார்மென்ஸ் மாடலாக புன்ட்டோ அபார்த் கார் வருகிறது. ஆனால், எஞ்சின், சஸ்பென்ஷன் மற்றும் தோற்றத்தில் மாறுதல்களோடு வருகிறது.

எஞ்சின்
இந்த காரில் அதிசக்திவாய்ந்த 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். அதிகபட்சமாக 145 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இது அறிமுகம் செய்யப்பட்ட பின், இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற பெருமையை பெற இருக்கிறது.

தோற்றம்
அபார்த் பிராண்டின் பிரத்யேக சின்னங்கள், கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், அபார்த் தேள் சின்னத்தை நினைவூட்டும் அலாய் வீல் டிசைன், புதிய வண்ணக் கலவையில் இந்த கார் வர இருக்கிறது. அதாவது, சாதாரண புன்ட்டோ எவோ காரையும், இதனையும் வேறு படுத்தும் விதத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

சிறப்பம்சங்கள்
அதிக சக்திகொண்ட இந்த காரின் எஞ்சினின் செயல்திறனுக்கு ஈடுகொடுக்கும் பிரத்யேக சஸ்பென்ஷன், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் போன்றவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
அடுத்த மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.9.50 லட்சம் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








