ஆஸ்திரேலியாவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த புதிய ஃபோர்டு எண்டெவர்... காரணம்?
முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு எண்டெவர்[வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது] எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பிரிவு உருவாக்கியிருக்கும் இந்த புதிய எஸ்யூவி தோற்றத்திலும், வசதிகளிலும் மிகச்சிறப்பாக இருக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் சோதனை செய்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி திடீரென தீப்பிடித்து எரிந்து கருகியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஃபோர்டு நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உடனடி விசாரணை
புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து ஃபோர்டு ஆஸ்திரேலியா நிறுவனம் ஆய்வு செய்தது. அதில், முதல்கட்ட விசாரணை குறித்த தகவல்களை ஃபோர்டு ஆஸ்திரேலியா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

காரணம் என்ன?
ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர் டெஸ்ட் டிரைவ் செய்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் பேட்டரியில் உள்ள நேர்மின், எதிர்மின் முனை வயர்கள் சரியாக பொருத்தப்படாமல் இருந்ததால், எதிர்பாராதவிதமாக இருமுனை வயர்களும் இணைந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது ஒரேயொரு முறை மட்டுமே நிகழும், எதிர்காலத்தில் இந்த பிரச்னை நிகழாது என்றும் தெரிவித்துள்ளது.

சர்ச்சை
தீப்பிடித்தற்கு எஞ்சினில் இருக்கும் குறைபாடுதான் காரணம் என்று சர்ச்சை ஏற்பட்டது. மீடியாக்களும் இதே கருத்தை தெரிவித்ததுடன், புதிய ஃபோர்டு எண்டெவர் குடும்பத்தை சேர்ந்த பிக்கப் டிரக் மாடலான ரேன்ஜரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த நிலையில், ஃபோர்டு ஆஸ்திரேலியா நிறுவனம் எஞ்சினில் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர் பதட்டம்...
தீப்பிடித்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை ஓட்டிய பத்திரிக்கையாளர் பீட்டர் பர்ன்வெல் கூறுகையில், காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது எச்சரிக்கை விளக்குகள் எரிந்து அணைந்தன. அத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையில் முற்றிலும் செயல் இழந்தது. இதையடுத்து, எஞ்சினும் அணைந்த நிலையில், அடுத்த நிமிடமே எஞ்சின் பகுதியிலிருந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது என்று அந்த நிமிடங்களை பதட்டத்துடன் கூறியிருக்கிறார்.

இந்தியா வரும் மாடல்...
தீப்பிடித்து பதட்டத்தை ஏற்படுத்திய புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே, இந்த சம்பவம் புதிய ஃபோர்டு எண்டெவரை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியர்களின் மத்தியிலும் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Photo Source


Click it and Unblock the Notifications








