புதிய ஜாஸ் புண்ணியத்தில் மஹிந்திராவை முந்திய ஹோண்டா கார்ஸ்!
கடந்த மாதம் விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா ஜாஸ் கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால், கடந்த ஜூலையில் ஹோண்டா இந்தியா கார் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அத்துடன், மூன்றாவது இடத்தில் இருந்த மஹிந்திராவையும் விற்பனையில் முந்தியிருக்கிறது. இதனால், மஹிந்திராவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

மஹிந்திரா விற்பனை
கடந்த மாதம் மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவு மொத்தம் 14,556 கார்களை விற்பனை செய்திருக்கிறது. அதேநேரத்தில், ஹோண்டா கார் நிறுவனம் 18,606 கார்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த மாதம் மட்டுமல்ல, ஜூனிலும் மஹிந்திராவின் விற்பனையை ஹோண்டா முந்தியது. இதனால், மஹிந்திராவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஹோண்டா விற்பனை வளர்ச்சி
கடந்த ஆண்டு ஜூலையில் 15,709 கார்களை ஹோண்டா கார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதம் 18,606 கார்களை ஹோண்டா விற்பனை செய்திருப்பதுடன், 18.44 சதவீதம் விற்பனையில் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. மேலும், புதிய ஜாஸ் காரின் வருகை ஹோண்டாவுக்கு கைகொடுத்து இருக்கிறது.

புதிய ஜாஸ் விற்பனை
புண்ணியமில்லாமல் இருந்த பழைய ஜாஸ் கார் விற்பனையை ஹோண்டா நிறுத்தியது பழைய கதை. இப்போது, புதிய ஜாஸ் வருகை ஹோண்டாவின் விற்பனைக்கு புதுத்தெம்பை ஊட்டியிருக்கிறது. கடந்த மாதம் 6,676 புதிய ஜாஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்திருக்கிறது. மேலும், முன்பதிவும் நல்ல அளவில் இருப்பதால், அடுத்த சில மாதங்களுக்கு இந்த நிலை தொடரலாம்.

இதர மாடல்கள்
கடந்த மாதம் புதிய ஜாஸ் காரை தவிர்த்து இதர மாடல்கள் அளித்துள்ள பங்களிப்பும் முக்கியமானதாகவே உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 4,589 அமேஸ் கார்களையும், 909 மொபிலியோ எம்பிவி கார்களையும், 1,122 பிரியோ கார்களையும், 5,180 சிட்டி கார்களையும் விற்பனை செய்திருக்கிறது.

தத்தளிக்கும் மஹிந்திரா
அதேநேரத்தில் இந்த பக்கம் மஹிந்திராவின் விற்பனை கணிசமாக சரிந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் 16,379 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த மஹந்திரா கடந்த மாதம் 14,273 பயணிகள் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது.இதனால், விர்பனை 13 சதவீதம் சரிந்தது. மேலும், கடந்த இரு மாதங்களாக மூன்றாவது இடத்திலிருந்து ஹோண்டா கார் நிறுவனத்தால் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும் அந்த நிறுவனத்தை டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. வரும் மாதங்களிலும் இதே நிலை நீடித்தால் மூன்றாவது இடத்தை சொந்தமாக்கிவிடும் ஹோண்டா இந்தியா கார் நிறுவனம்.

புதிய மாடல்கள்
விற்பனை சரிந்து வருவதை தவிர்க்கும் பொருட்டு, புதிய டியூவி 300 என்ற எஸ்யூவி மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அத்துடன், குவான்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய எஸ்யூவி மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய மாடல்கள் மூலம் நெருக்கடியை தவிர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








