ஜெனரல் மோட்டார்ஸுடன் இணைந்து தானியங்கி கார் தயாரிக்க ஹோண்டா திட்டம்
அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா நிறுவனம் டிரைவர் இல்லாமல் இயங்கக்கூடிய கார்களை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.
ஹோண்டா நிறுவனம் உலக அளவில் புகழ்மிக்க கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ஆனால், அந்நிறுவனம் இன்னும் கூடுதலான உயர் ரக தொழில்நுட்பம் கொண்ட கார்களை அறிமுகம் செய்யும் விருப்பத்தில் உள்ளது.

ஹோண்டா மோட்டார் அடுத்ததாக ஹைப்ரிட் மற்றும் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை உருவாக்கும் விருப்பத்தில் உள்ளது.
இதற்காக, தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் கூட்டனி அமைக்க உள்ளோம் என ஹோண்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி டகஹிரோ ஹச்சிகோ தெரிவித்தார்.
முன்னதாக, 2013-ஆம் ஆண்டில், ஜி.எம் மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் இணைந்து ஃப்யூவல் செல் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டனர்.
இந்த இரு நிறுவனங்களும், அந்தந்த நிறுவனங்களின் பேரில், ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்திலான தங்களது சொந்த கார்களை மார்ச் 2016 முதல் வெளியிட திட்டமிட்டுள்ளது.
வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த கூட்டணியை, தகவல் தொழில்நுட்பம், மின்மயமாக்கல் மற்றும் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களுக்கும் விரிவாக்கம் செய்ய விரும்புவதாக டகஹிரோ ஹச்சிகோ தெரிவித்தார்.
ஹோண்டா நிறுவனம் பாதுகாப்பு மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான விஷயங்களில் முன்னோடியாக உள்ளது. ஆனால், டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை சொந்தமாக அறிமுகம் செய்வது குறித்து எந்தவிதமான கால இலக்கும் வைத்து கொள்ளவில்லை.
ஆனால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2017-ல் தானியங்கி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதனால், ஹோண்டா நிறுவனம், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் தானியங்கி கார்கள் தொழில்நுட்பத்திலும் கை கோர்க்க திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








