கிராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் பெற்ற இந்தியாவில் தயாரான ஹூண்டாய் கிராண்ட் ஐ10!
லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பூஜ்ய பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. சிலி உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள்தான் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான கிராஷ் டெஸ்ட் அமைப்பான லத்தீன் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தியது. இடது பக்க டிரைவிங் கொண்ட அந்த கார் கிராஷ் டெஸ்ட்டில் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

பேஸ் மாடல்
பொதுவாகவே, கிராஷ் டெஸ்ட் செய்வதற்கு, பேஸ் மாடலையே என்சிஏபி அமைப்புகள் தேர்வு செய்யும். அந்த வகையில், இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்பட்ட, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பேஸ் மாடல்தான் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஏர்பேக் இல்லை
இந்தியாவில் தயாராகும் பேஸ் மாடலில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை கிடையாது. அதனால், கிராஷ் டெஸ்ட்டில் மிக மோசமான மதிப்பீட்டை பெற்றது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு, 4 என்ற தர மதிப்பீட்டை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பெற்றது. ஐரோப்பிய மார்க்கெட்டில் பேஸ் மாடலில் கூட ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதே அங்கு அதிக தர மதிப்பீட்டை பெற காரணமாகியிருக்கிறது.

வலு குறைந்த உடற்கூடு
லத்தீன் என்சிஏபி அமைப்பின் பாதுகாப்பு தர சோதனையில், இந்தியாவில் தயாராகும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் பாடி ஷெல் எனப்படும் உடல்கூடு மிகவும் வலிமை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது விபத்தின்போது, பயணிகளுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும்.

மூலப்பொருட்கள் கலவை
அதேநேரத்தில், ஐரோப்பிய அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் வலுவான பாடி ஷெல் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் பயன்படுத்தப்படும் உடல் கூட்டிற்கான மூலப்பொருட்களிலும், ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான கிராண்ட் ஐ10 காரின் உடற்கூடுக்கான மூலப்பொருட்களும் தரத்தில் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி
சரியான விலையில், தரமான உதிரிபாகங்கள் கொண்ட கார் என்பதால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விளங்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தயாரான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

கடுமையாகும் சட்டங்கள்
சர்வதேச பாதுகாப்பு தரத்திற்கும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு தரத்திற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று, கிராஷ் டெஸ்ட் சோதனை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், கார்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சர்வதேச அளவிலான பாதுகாப்பு அம்சங்களுடன் கார்களை தயாரிப்பதை கட்டாயமாக்கவும், அதனை 2017ம் ஆண்டிலிருந்து அமலுக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








