2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரிலீசாகிறது புதிய ஜாகுவார் எக்ஸ்இ!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜாகுவார் எக்ஸ்இ செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் செடான் மாடலாக ஜாகுவார் வடிவமைத்திருக்கும் புதிய எக்ஸ்இ கார் மாடல் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் முதல்முறையாக வெளியுலகிற்கு சமீபத்தில் தரிசனம் தந்தது. இந்த புதிய கார் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மற்றும் ஆடி ஏ3 கார்களுக்கு நேரடி போட்டியாக வர இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முழுமையான அலுமினியம் கட்டுமானத்தில், இலகு எடை மற்றும் உறுதிமிக்க கட்டமைப்பில் மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதுடன் ஓட்டுனர்களுக்கு ஓர் உன்னதமான ஓட்டுதல் தரத்தை வழங்கும் கார் மாடலாக இருக்கும் என ஜாகுவார் மார்தட்டி கூறி வருகிறது.
இந்த காரில் 340 எச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக விற்பனைக்கு வர இருக்கிறது. இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். இந்த நிலையில், அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சி மூலமாக இந்தியாவில் இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








