சாப்பாடுச் சண்டை... தயாரிப்பாளரை தாக்கிய டாப் கியர் ஜெர்மி க்ளார்க்சன்!
இந்தியாவை அவமதித்தாக சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சையில் சிக்கிய டாப் கியர் தொகுப்பாளர் புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சாப்பாடு தயார் செய்ய தவறிய பிபிசி தயாரிப்பாளரை டாப் கியர் தொகுப்பாளருமான ஜெர்மி கிளார்க்சன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து, டாப் கியர் சீசன் 22 நிகழ்ச்சி ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தயாரிப்புகளிலிருந்து ஜெர்மி கிளார்க்சனை பிபிசி நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்துள்ளதோடு, அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பை ஒத்தி வைத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக, விசாரணை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

சாப்பாட்டுச் சண்டை
டாப் கியர் சீசன் 22 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின் ஜெர்மி கிளார்க்சன் மற்றும் குழுவினர் இரவு உணவுக்காக சென்றுள்ளனர். அந்த நேரத்தில் உணவு தயார் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து, தயாரிப்பாளருடன் வாக்குவாதம் செய்ததோடு, அவரை ஜெர்மி தாக்கியதாக கூறப்படுகிறது.

பிபிசி அதிரடி
இந்த சம்பவம் தொடர்பாக வந்த புகாரையடுத்து, ஜெர்மி கிளார்க்சனை பிபிசி நிர்வாகம் அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது. மேலும், இது பற்றி ஜெர்மி கிளார்க்சனிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

டாப் கியர் புகழ்
ஜெர்மி கிளார்க்சன் வழங்கி வரும் டாப் கியர் சீசன் நிகழ்ச்சி ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியில் வெகு பிரபலமானது. 1988ம் ஆண்டு டாப் கியர் நிகழ்ச்சி மூலமாகவே பிரபலமான முகமாக தெரியத் துவங்கினார் ஜெர்மி கிளார்க்சன். இதுதவிர, சன்டே டைம்ஸ் மற்றும் தி சன் ஆகிய இதழ்களிலும் சிறப்பு கட்டுரைகளை எழுதி வருகிறார் ஜெர்மி கிளார்க்சன்.

தொகுப்பாளர்
டாப் கியர் சீசன் நிகழ்ச்சியை ரிச்சர்டு ஹமான்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோருடன் இணைந்து ஜெர்மி கிளார்க்சன் வழங்கி வருகிறார். கிளார்சனின் பேச்சு நடை மற்றும் நகைச்சுவை கலந்த சொல்லாடல்களால் டாப் கியர் சீசன் நிகழ்ச்சி பெரும் பிரபலமாக இருந்து வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பு, தயாரிப்பு, பத்திரிக்கையாளர் என்று ஆட்டோமொபைல் உலகில் தனக்கென ஒரு இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.

சர்ச்சை நாயகன்
ஜெர்மி கிளார்க்சன் சர்ச்சையில் அவ்வபோது சிக்குவது வாடிக்கையானதுதான். சமீபத்தில் நிறவெறி பேச்சு காரணமாக சர்ச்சை ஏற்பட்டது. பல தருணங்களில் பிபிசி நிர்வாகம் ஜெர்மி கிளார்க்சனுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை நிலைமையை உணர்ந்து சஸ்பென்ட் செய்துள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்ப திட்டமிட்டிருந்த பகுதியும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூல் மனிதர்...
இந்த சம்பவம் குறித்து இதுவரை ஜெர்மி கிளார்க்சன் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. மீடியா கையிலும் சிக்கவில்லை. பல சமயங்களில் வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டவர் இந்த முறை கையை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஆதரவும், எதிர்ப்பும்
ஜெர்மி கிளார்க்சனுக்கு ஏராளமான ரசிகர்களும், ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் பின்தொடருகின்றனர். அதில், பலர் ஜெர்மி கிளார்க்சனை மீண்டும் பணியமர்ந்த வலியுறுத்தியுள்ளனர். இதற்காக, ட்வீட்டரில் ஹேஷ்டேக் ஒன்றையும் உருவாக்கி பிரசாரத்தை துவங்கியுள்ளனர். ஆனால், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








