ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் அறிமுகமாகும் மாருதி ஆல்ட்டோ மாடல்கள்!
மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்க மாருதி முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் சிறிய வகை கார் மாடல்களில் பாதுகாப்பு அம்சங்கள் மிகக் குறைவாக இருப்பது, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டுகளில் அம்பலமானது. பல கார் மாடல்கள் விபத்தில் சிக்கினால், பயணிகளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கார்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக் போன்ற பாதுகாப்பு வசதிகள் கார்களில் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய இரு நிறுவனங்களும், தங்களது கார் மாடல்களின் பேஸ் வேரியண்ட் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளை நிரந்தரமாக அளிப்பதாக அறிவித்துள்ளன.

இதைத்தொடர்ந்து, இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டான மாருதி ஆல்ட்டோ கார்களில் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை நிரந்தரமாக வழங்க மாருதி முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து அல்ஜீரிய நாட்டிற்கு ஏற்றுமதியாகும் ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களில் ஏற்கனவே டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதிகள் கொண்டதாக இருக்கிறது.
இந்த நிலையில், உள்நாட்டில் விற்பனையாகும் ஆல்ட்டோ மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தரமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஆல்ட்டோ கார்களில் டிரைவர் சைடு ஏர்பேக் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்படுவதன் மூலம், ஆல்ட்டோ கார்களின் விலை சிறிது அதிகரிக்கும். ஆனாலும், கூடுதல் பாதுகாப்பு கொண்ட மாடலாக வெளிவர இருப்பது மகிழ்ச்சியான செய்தியே!


Click it and Unblock the Notifications








