விபத்தில் சிக்கி சின்னாபின்னமான மாருதி பலேனோ... கட்டுமானத்தின் மீது எழும் சந்தேகம்!
பஞ்சாப் மாநிலத்தில், நடந்த கோர விபத்தில் மாருதி பலேனோ கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த நிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் மாருதி பலேனோ கார் அப்பளம் போல் நொறுங்கியதை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், காரின் கட்டுமானம் குறித்த சந்தேகக் கேள்விகளையும் அவர்கள் மனதில் எழச் செய்திருக்கிறது.

நெஞ்சை உலுக்கும் சம்பவம்
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்தவர் சஞ்சய் சேகல். தொழிலதிபரான இவர் தீபாவளி பண்டிகையின்போது, ஓர் புத்தம் புதிய மாருதி பலேனோ காரை வாங்கினார். ஆசையாய் வாங்கிய தனது காரை பரீதாபாத்தில் வசிக்கும் திருமணமான தனது மகளிடம் காண்பிக்க வேண்டும் எண்ணினார். அத்துடன், தனது பேத்தியின் பிறந்தநாளை கொண்டாடவும் அங்கு கொண்டாடவும் திட்டமிட்டார். அதற்காக, தனது மனைவி கிரண்[48] மற்றும் உறவினர்கள் நான்கு பேருடன் காரில் பரீதாபாத் புறப்பட்டார்.

கோர விபத்து
கடந்த 18ந் தேதி இரவு 10.30 மணியளவில் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட அவர்கள் 400 கிமீ தொலைவில் உள்ள பரீதாபாத்திற்கு தனது மாருதி பலேனோ காரில் பயணத்தை தொடர்ந்தனர். தேசிய நெடுஞ்சாலை எண்-1 ல் சென்றுகொண்டிருந்த அவர்களது கார் கர்னால் அருகிலுள்ள கரோண்டா என்ற இடத்தில் சென்றபோது மிக கோரமான விபத்தில் சிக்கியது.

டிரக் வடிவில் வந்த எமன்
சஞ்சய் ஓட்டிச் சென்ற மாருதி பலேனோ கார் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த டிரக்குடன் எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பலமுறை பல்டி அடித்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பையும் தாண்டி, எதிர்புறத்தை தாண்டி சாலையோரம் போய் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சஞ்சய் சேகல், அவரது மனைவி கிரண், உறவினர்கள் பரூல், அன்சுல் ஆகியோர் பலியாகினர். சோனு மற்றும் பல்லவி ஆகிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலேனோ கட்டுமானம்
இந்த விபத்தில் சிக்கிய பலேனோ கார் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்துவிட்டது. ஏற்கனவே, மாருதி கார்களின் கட்டுமானத்தின் மீது சந்தேகக் குரல்கள் இருந்து வரும் நிலையில், இந்த விபத்தில் சிக்கிய பலேனோவும் அந்த சந்தேகத்துக்கு எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துவிட்டது. மேலும், காரில் இருந்த பாதுகாப்பு வசதிகளும் பயனற்றுவிட்டதோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

வலுவான கார்
மிக உறுதியானதாகவும், இலகு எடை கொண்ட ஸ்டீல்கள் பலேனோ காரில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மாருதி தெரிவிக்கிறது. மேலும், ஸ்விஃப்ட் காரைவிட எடை குறைவான மாடல் என்றும் தெரிவித்தது. மாருதி கார்களிலேயே மிக நவீன கட்டமைப்பு முறையில் தயாரிக்கப்பட்ட மாடல். ஆனால், இந்த விபத்து மூலம், மாருதி பலேனோ காரின் கட்டுமானத்தில் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. அதிவேகத்தில் டிரக்குடன் மோதியதால் இதுபோன்று கார் உருக்குலைந்து போனதாக சப்பைக்கட்டு கட்டினாலும், இந்தளவு மோசமாக கட்டுமானம் உருக்குலையுமா என்று சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜீரோ மார்க்
கடந்த ஆண்டு குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில், இந்தியாவில் விற்பனையாகும் மாருதி ஸ்விஃப்ட் கார் மதிப்பீட்டில் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்று அதிர்ச்சியடைய வைத்தது. ஆனாலும், இதே கார் வேறு மார்க்கெட்டில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, கார்களின் தர விஷயத்தில் காலம் தாழ்த்தாமல், வெளிநாடுகளுக்கு இணையான தர நிலைக்கு கார்களை மேம்படுத்தி விற்பனை செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். ஏனெனில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல மாடல்கள், வெளிநாடுகளுக்கு தரமான ஸ்டீல்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, அதே மாடல்களை இந்தியாவிலும் உடனடியாக விற்பனைக்கு கட்டமாயமாக்கும்பட்சத்தில் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க ஓரளவு உதவும்.

விதிமீறல்கள்
கார்களின் கட்டுமான தரத்தை மேம்படுத்தினாலும், விதிமீறல்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. பலேனோ கார் மீது மோதிய உருளைக்கிழங்கு டிரக் டிரைவர் மீது வாகனத்தை கவனக்குறைவாகவும், விபத்தை ஏற்படுத்தும் வித்தில் தாறுமாறாக ஓட்டிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








