முன்கூட்டியே மூன்றாவது டட்சன் காரை அறிமுகப்படுத்தும் நிசான்!
2016ம் ஆண்டிற்குள் இந்திய கார் மார்க்கெட்டில் 10 சதவீத பங்களிப்பை பெறுவதே இலக்கு என கடந்த ஆண்டு டட்சன் பிராண்டு அறிமுக விழாவில் நிசான் நிறுவனம் சபதம் எடுத்தது.
இதற்காக, டட்சன் பிராண்டில் கோ காரையும், சமீபத்தில் கோ ப்ளஸ் காரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால், எதிர்பார்த்தபடி அடுத்த ஆண்டிற்குள் 10 சதவீத பங்களிப்பை பெறுவது மிக கடினம் என்பதை நிசான் உணர்ந்து கொண்டுள்ளது.

குறைந்தபட்சம் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என்று நோக்கில், டட்சன் பிராண்டில் மூன்றாவது காரை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது ரெடிகோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் காரின் தயாரிப்பு நிலை மாடலாக இருக்குமென்பது தெரிந்ததுதான்.
இந்த புதிய குட்டிக் கார் மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இந்த நிலையில், அறிமுகம் செய்யப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிட முன்கூட்டியே புதிய டட்சன் காரை அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
2016ம் ஆண்டில் 10 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். அதை தொட்டுவிட முடியுமா என்பதை இப்போது கூற முடியாது. ஆனால், தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறோம். புதிய கார் மாடல்கள் மற்றும் டீலர் விரிவாக்க நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று டட்சன் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








