சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் காரை அசெம்பிள் செய்த சச்சின் டெண்டுல்கர்!!
'மேக் இன் இந்தியா' திட்டக் கொள்கையின் அடிப்படையில், சென்னை ஆலையில் புதிய முறையிலான கார் உற்பத்தியை பிஎம்டபிள்யூ நிறுவனம் இன்று துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை, அங்கிருந்த பொறியாளர்களுடன் இணைந்து அசெம்பிள் செய்தார். சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் துவங்கப்பட்டிருக்கும், இந்த புதிய கார் உற்பத்தி முறை பற்றிய அனைத்து விபரங்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

உள்நாட்டு உதிரிபாகங்கள்
'மேக் இன் இந்தியா' கொள்கையின்படி, தனது கார்களுக்கான 50 சதவீத உதிரிபாகங்களை இந்திய சப்ளையர்களிடமிருந்து பெற்று கார்களை உற்பத்தி செய்ய உள்ளது பிஎம்டபிள்யூ.

விலை குறையும்
இந்தியாவிலேயே அதிக உதிரிபாகங்களை பெறுவதன் மூலம் காரின் உற்பத்தி செலவீனம் வெகுவாக குறையும். இதன் காரணமாக பிஎம்டபிள்யூ கார்கள் சரியான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

உலகத்தரம்
இந்திய உதிரிபாகங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதாலும், உலகத் தரத்தில் இந்த கார்கள் இருக்கும். உலகத் தரத்திலான உற்பத்தி முறைகளை இந்த ஆலையில் கடைபிடிக்கின்றோம் என்று அந்த நிறுவனத்தின் உயரிதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிக மாடல்கள்
இந்தியாவில் அதிக சொகுசு கார் மாடல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று பிஎம்டபிள்யூ. சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஹேட்சேப் மாடலும், 3 சீரிஸ், 3 சீரிஸ் கிராண்ட் டூரிஷ்மோ, 5 சீரிஸ், 7 சீரிஸ் போன்ற செடான் வகை மாடல்களு்ம், எக்ஸ்1, எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 ஆகிய எஸ்யூவி வகை மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டுகின்றன. சென்னை ஆலையின் இரு உற்பத்தி பிரிவுகளில் இந்த கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சப்ளையர்கள்
பிஎம்டபிள்யூ கார்களுக்கான எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்களை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனமும், ஆக்சில்களை இசட்எஃப் ஹீரோ நிறுவனமும், டோர் பேனல்கள் ட்ரேக்ஸ்மயர் இந்தியா நிறுவனமும், எக்ஸ்சாஸ்ட் சிஸ்டத்தை டெனக்கோ ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனமும், ஏர்கண்டிஷன் மற்றும் குளிரூட்டும் சிஸ்டம்களை வாலியோ மற்றும் மஹேல் பெஹர் ஆகிய நிறுவனங்களும் சப்ளை செய்கின்றன.

சச்சின் தயாரித்த கார்
சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின்படி 50 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் தயாரிக்கப்பட்ட முதல் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை கிரிக்கெட் ஜாம்பவானும், பிஎம்டபிள்யூ பிரியருமான சச்சின் டெண்டுல்கர், உற்பத்தி பிரிவை சேர்ந்த பொறியாளர்களுடன் இணைந்து அசெம்பிள் செய்தார்.

பெருமிதம்
"நான் பிஎம்டபிள்யூ கார் பிரியர். நீண்ட காலமாக பிஎம்டபிள்யூ கார்களை பயன்படுத்தி வருகிறேன். ஆனால், என் கைகளால் ஒரு பிஎம்டபிள்யூ காரை உருவாக்கினேன் என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், என் வாழ்வில் மறக்க முடியா தருணமாகவும் உணர்கிறேன். இங்கு பின்பற்றப்படும் தர கட்டுப்பாடுகளும் என்னை கவர்ந்தது" என்று பெருமிதத்துடன் கூறினார்.

உதிரிபாகங்கள்
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் 2,800 உதிரிபாகங்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 50 சதவீதம் அளவுக்கு இந்தியாவிலேயே பெறப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications








