ராணுவ பரீட்சையில் வெற்றி பெற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டாடா சஃபாரி ஸ்ட்ராம்!
ராணுவ பயன்பாட்டுக்காக வாகனங்கள் வாங்கும்போது, அவை கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அந்த சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அந்த வாகனத்தை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு ராணுவத்திடம் விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிலையில், பல்வேறு பயன்பாடுகளுக்காக எஸ்யூவி ரக வாகனங்களை இந்திய ராணுவம் வாங்க இருக்கிறது. ரூ.500 கோடி முதல் ரூ.750 கோடி மதிப்பில் புதிய வாகனங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால், பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வாகனங்களை சப்ளை செய்ய விருப்பம் தெரிவித்தன.

ஆனால், மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மட்டுமே தற்போது தங்களது வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துவதற்காக வழங்கியுள்ளன. அதில், டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆகிய எஸ்யூவி மாடல்கள் ராணுவத்தின் கடுமையான சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த எஸ்யூவி மாடல்களை ராணுவத்திற்கு சப்ளை செய்வதற்கு இரண்டு நிறுவனங்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவத்திற்காக சப்ளை செய்யப்படும் மாடல்களில் சில கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும். அதற்காக, மஹிந்திரா ஸ்கார்ப்பியோவிலும், டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டன.

இரு எஸ்யூவிகளும் குறைந்தபட்சம் 800 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். ராணுவ தளவாடங்கள் மற்றும் இதர வாகனங்களை இழுத்து செல்ல வசதியாக ஒரு கொக்கியும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். முன்னதாக, மாருதி ஜிப்ஸி மற்றும் கமாண்டர் ஆகிய எஸ்யூவி மாடல்கள் குறைந்தபட்சம் 500 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்டவையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








